நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

ஜொகூர் பாருவில் களைகட்டும் பெருநாள் விற்பனை; சிங்கப்பூர் வாடிக்கையாளர்களின் முதன்மைத் தேர்வாக நீடிக்கிறது

ஜொகூர்:

சிங்கப்பூர் டாலர் மதிப்பு மலேசிய ரிங்கிட்டிற்கு எதிராகச் சற்றே சரிவடைந்துள்ள போதிலும், ஹரிராயா பெருநாள் கொண்டாட்டங்களுக்கான பொருட்களை வாங்குவதற்கு சிங்கப்பூர் மக்கள், ஜொகூர் மாநிலத்தையே தங்களின் முதன்மைத் தேர்வாகக் கொண்டுள்ளனர். 

இங்குள்ள பொருட்களின் பன்முகத்தன்மை, சலுகை விலைகள், உற்சாகமான வணிகச் சூழல் ஆகியவை அந்நாட்டு மக்களைப் பெருமளவில் கவர்ந்துள்ளதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு ஒரு சிங்கப்பூர் டாலர் 3.30 ரிங்கிட் வரை கிடைத்து வந்த நிலையில், தற்போது அதன் மதிப்பு சுமார் 3.08 ரிங்கிட்டாகக் குறைந்துள்ளது. இருப்பினும், இந்த மாற்றங்கள் தங்களின் திட்டமிடலைப் பாதிக்கவில்லை என ஜொகூர் பாரு அங்சானா வணிக வளாகத்திற்கு வந்திருந்த சிங்கப்பூர் பயணிகள் தெரிவிக்கின்றனர். 

பலதரப்பட்ட ஆடைத் தேர்வுகள், பலகாரங்கள் ஒரே இடத்தில் கிடைப்பதால், பண மதிப்பு மாற்றத்தையும் கடந்து ஜொகூர் லாபகரமான இடமாகவே பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரைச் சேர்ந்த பல குடும்பங்கள் வார இறுதி நாட்களில் நிலவும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, வேலை நாட்களிலேயே இங்கு வந்து தங்களுக்குத் தேவையான ஆடைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், சமையல் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். 

குறிப்பாக ரமலான் மாதத்தின் முதல் வாரத்திலிருந்தே பலமுறை ஜொகூர் வந்து இன்பச் சுற்றுலா போலக் கொள்முதல் செய்வதை அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

சிங்கப்பூர் மக்களின் இந்த வருகை ஜொகூரில் உள்ள உள்ளூர் வணிகர்களுக்கும், பாரம்பரிய ஆடை விற்பனையாளர்களுக்கும் பெரும் பொருளாதார நன்மையை அளித்துள்ளது. 

இதன் மூலம் பண்டிகைக் காலங்களில் ஜொகூர் மாநிலம் ஒரு மிகச்சிறந்த வணிக மையமாகத் தனது நிலையைத் தொடர்ந்து நிலைநாட்டி வருகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset