நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் பலி

காபூல்:

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தின் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு தெரிவித்துள்ளது. 

திங்கள்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில், 2,000 படுக்கைகள் கொண்ட அந்த மருத்துவமனை கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், சுமார் 250 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதல் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், பாகிஸ்தான் மீண்டும் ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை மீறியுள்ளதாகவும், இது மனிதநேயமற்ற ஒரு குற்றம் என்றும் சாடியுள்ளார். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், ஆப்கானிஸ்தான் முன்வைக்கும் இந்தக் குற்றச்சாட்டுகளைப் பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாதிகளின் நிலைகள், ஆயுதக் கிடங்குகளை மட்டுமே குறிவைத்துத் துல்லியமாகத் தாக்குதல் நடத்தியதாகப் பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் எதையும் தாங்கள் தாக்கவில்லை என்றும் பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த சில வாரங்களாகவே பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்த வான்வழித் தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. 

பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் புகலிடம் அளிப்பதாகப் பாகிஸ்தான் குற்றம் சாட்டுவதும், அதற்கு ஆப்கானிஸ்தான் மறுப்புத் தெரிவிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset