நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

பொருளாதார அசாதாரணத்திலும் மலேசிய நிதி நிலை வலுப்பெற்றது

கோலாலம்பூர்: 

உலக பொருளாதாரத்தின் நிச்சயமற்ற நிலையையும் உலகளாவிய மூல எண்ணெய் விலை உயர்வையும் எதிர்கொள்ளும் நிலையில், அரசு தற்போது மேற்கொள்ளும் சிக்கன நடவடிக்கைகள் நாட்டின் நிதி நிலைமை வலுவாகத் தொடர்வதை உறுதி செய்யும் ஒரு முன்னோக்கிய திட்ட அணுகுமுறையாக பார்க்கப்படுகின்றன.

அரசின் செலவின முன்னுரிமைகளை மறுசீரமைக்கும் முயற்சி மிகவும் முக்கியமானது. இதன் மூலம் நாட்டின் நிதி வளங்கள் தேவையுடைய துறைகளுக்கும் மக்களுக்கும் செலுத்தப்பட முடியும் என்று யுனிகேஎல் வணிகப் பள்ளியின் பொருளாதார ஆய்வாளர் இணை பேராசிரியர் டாக்டர் ஐமி ஸுல்ஹஸ்மி அப்துல் ரஷீத் தெரிவித்துள்ளார்.

இதனால் உலகளாவிய பொருளாதார நெருக்கடி நீடித்தால் அரசுக்கு தேவையான நிதி இடைவெளி இருக்கும் வகையில் இந்த நடவடிக்கை உதவும் என்றும் அவர் கூறினார்.

இந்தச் சிக்கன அணுகுமுறை, நாட்டின் நிதி மேலாண்மையைக் கட்டுப்பாடுடனும் தெளிவான முன்னுரிமைகளுடனும் மேற்கொள்ளும் அரசின் உறுதியை வெளிப்படுத்துகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

“இந்த சிக்கன நடவடிக்கை, செலவுகளை முன்னுரிமைகளின் அடிப்படையில் ஒழுங்குபடுத்த உதவுகிறது,” என்று அவர் பெரிதா ஹரியான் நாளிதழுக்குத் தெரிவித்தார்.

இந்தச் சிக்கன நடவடிக்கைகள் மக்களின் நலனுக்கான திட்டங்களான பூடி மடானி, சும்பங்கன் அசாஸ் ரஹ்மா (SARA), சும்பங்கன் துணை ரஹ்மா (STR) ஆகியவற்றுக்கும்  போதுமான நிதி இடைவெளியை உறுதி செய்யக்கூடும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் 3.5 சதவீத நிதி பற்றாக்குறையை இலக்காக நிர்ணயித்துள்ள நிலையில், அரசின் மீது நிதி அழுத்தம் அதிகரிக்கலாம் என்றும் ஐமி ஸுல்ஹஸ்மி தெரிவித்தார்.

கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில், பொருளாதாரத்தை ஆதரிப்பதற்கும் மக்களுக்கும் வணிகங்களுக்கும் உதவுவதற்கும் அரசு பெரிய அளவில் செலவுகளை ஒதுக்க வேண்டியிருந்தது என்ற அனுபவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

உலகளாவிய பொருளாதார நெருக்கடி தொடர்ந்தால், மக்களையும் சிறு, நடுத்தர நிறுவனங்களையும் (PMKS) ஆதரிக்க அரசுக்கு போதுமான நிதி இடைவெளி இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், உலகளாவிய மூல எண்ணெய் விலை உயர்வும் உலக, உள்ளூர் பொருளாதாரங்களுக்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

 செலவு அதிகரிப்பது போக்குவரத்து, உற்பத்தி செலவுகளையும் உயர்த்தும். இதனால் தேவைகள் குறையும்போது உலக வர்த்தகமும் மந்தமடையக்கூடும் என்று ஐமி ஸுல்ஹஸ்மி தெரிவித்தார்.

 தொடர்ந்து,  அரிசி, கோதுமை, மக்காச்சோளம் போன்றவற்றின் விலை உயர்வும் பல நாடுகளில் பணவீக்க அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset