செய்திகள் வணிகம்
எண்ணெய் விலை உயர்வு எச்சரிக்கை: உலகளாவிய பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்
கோலாலம்பூர்:
ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 200 அமெரிக்க டாலர் வரை உயர்ந்தால், உலக பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
முதலீட்டு தந்திர இயக்குநர் முஹம்மத் செடெக் ஜந்தான் கூறுகையில், எண்ணெய் விலை 10 டாலர் உயர்ந்தாலேயே உலக பொருளாதார வளர்ச்சி சுமார் 0.15 முதல் 0.20 சதவீதம் வரை குறையலாம்; அதே நேரத்தில் பணவீக்கம் 0.2 முதல் 0.3 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்றார்.
எண்ணெய் விலை 95 முதல் 105 டாலர் வரம்பில் இருந்தாலும் உலக வளர்ச்சி 0.3 முதல் 0.6 சதவீதம் வரை குறையவும், பணவீக்கம் 0.4 முதல் 0.7 சதவீதம் வரை உயரவும் வாய்ப்புள்ளதாக கடந்த அனுபவங்கள் காட்டுகின்றன.
விலை 200 டாலர் வரை உயர்ந்தால் அதன் தாக்கம் இன்னும் அதிகமாகி, வளர்ச்சி குறைந்து பணவீக்கம் அதிகரிக்கும் “நிலைத்தடை பொருளாதாரம்” உருவாகும் அபாயம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இத்தகைய சூழலில் உற்பத்தி செலவுகள் அதிகரித்து, குடும்பங்களின் செலவீனமும் நிறுவன முதலீடும் குறையக்கூடும்.
பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் காரணமாக மத்திய வங்கிகள் வட்டி தளர்வை தாமதப்படுத்தினால் நிதி நிலையும் கடுமையாகலாம் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்கா, இஸ்ரேலுடன் நீடித்து வரும் மோதலின் பின்னணியில், வணிகக் கப்பல்களுக்கு நடந்த தாக்குதல்களால் எண்ணெய் விலை 200 டாலர் வரை உயரலாம் என ஈரான் தெரிவித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சர்வதேச ஆற்றல் நிறுவனம் அவசர எண்ணெய் கையிருப்புகளை வெளியிட பரிந்துரைத்துள்ளது.
எண்ணெய் விலை திடீரென உயர்ந்தால் முதலில் உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்து, போக்குவரத்து, சரக்கு கடத்தல், தொழிற்துறை உற்பத்தி செலவுகள் உயர்வதாகவும், பின்னர் உணவு உற்பத்தி துறைகளில் பணவீக்கம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
மலேசியாவைப் பொறுத்தவரை, நேரடி விநியோக சிக்கல் இல்லாவிட்டாலும் எரிபொருள் மானியம், பணவீக்கம், அரசின் நிதிச்சுமை ஆகியவை முக்கிய தாக்கமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது புடி 95 திட்டத்தின் கீழ் மலேசியர்களுக்கு ஆர்.ஓ.என் 95 எரிபொருள் ஒரு லிட்டருக்கு 1.99 ரிங்கிட் என்ற விலையில் வழங்கப்படுகிறது.
உலக எண்ணெய் விலை அதிகரித்தாலும் உள்ளூர் விலை நிலையாக இருந்தால், மானியச் செலவு அதிகரித்து அரசின் நிதிச்சுமை கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
August 23, 2026, 11:18 am
மறுபயனீட்டுக்காக சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் துணிகள்
August 17, 2026, 3:15 pm
நாசிகண்டார் மாமா கேஃப்பே தனது 7ஆவது உணவகக் கிளையை வெற்றிகரமாக திறந்தது
August 13, 2026, 4:53 pm
சிக்னேச்சர் இன்டர்நேஷனல் - கெச்சாரா இணைந்து அமைத்த புதிய உணவு விநியோகம், திறன் மேம்பாட்டு மையம்
August 12, 2026, 9:27 pm
"மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு என்னை நியமிக்க வேண்டாம்": டாடா சன்ஸ் தலைவர் அறிவிப்பு
July 16, 2026, 5:43 pm
ஜப்பானில் சைபர் தாக்குதல்: நிச்சிரேய் நிறுவனம் பாதிக்கப்பட்டது
July 11, 2026, 7:04 pm
