நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மத்திய கிழக்கில் கொழுந்துவிட்டு எரியும் போர்: எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்

துபாய்:

அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த இரண்டு வாரங்களாக மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ளது. 

இந்த மோதலில் இதுவரை சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஈரான் தற்போது தனது தாக்குதலை எண்ணெய் விநியோகக் கட்டமைப்புகள், சரக்குக் கப்பல்கள் மீது திருப்பியுள்ளது. ஈராக் கடல் பகுதியில் இரண்டு எண்ணெய் கப்பல்களை ஈரான் தீக்கிரையாக்கியுள்ளதாகத் மேற்கத்திய ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்களின் பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 200 அமெரிக்க டாலர் வரை உயரும் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. 

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு நடைபெறும் 'ஹார்முஸ்' நீரிணைப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகக் கூறியுள்ள ஈரான், அமெரிக்காவின் எந்தவொரு தலையீட்டையும் முறியடிப்போம் எனத் தெரிவித்துள்ளது.

மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான போரில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறியுள்ளதுடன், எண்ணெய் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் கையிருப்பில் உள்ள மூலோபாய எண்ணெய் வளங்களை விடுவிக்க ஒப்புதல் அளித்துள்ளார். 

இருப்பினும், ஈரானின் ட்ரோன் தாக்குதல் அச்சம், கடல்வழிப் பாதைகளில் வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. 

இந்தப் போர் சூழலால் உலகப் பொருளாதாரம் பெரும் மந்தநிலையைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து கப்பல்களை தீக்கிரையாக்கிவிட்டு ஈரான் மீது பழிபோடுவதாக சில ஊடகங்கள் கருத்துரைத்துள்ளன. 

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset