நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்கத்தை கவிழ்க்க முயன்றதாக நிஸாமுடின் ஹமீத் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் 

கோலாலம்பூர்: 

மறைந்த துன் டைம் ஸைனுடின் அவர்களின் மனைவி தோ புவான் நைமா அப்துல் காலித் அவர்களின் வழக்கறிஞர் நிஸாமுடின் ஹமீத், அரசாங்கத்தைக் கவிழ்க்க முயன்றதாக உள்ள குற்றச்சாட்டைப் பற்றிய விசாரணைக்காக இன்று காலை 10.10 மணிக்கு புக்கிட் அமான் வந்துள்ளார்.

போலிசாரின் விசாரணைக்காக நடைபெறும் கேள்வி–பதில் அமர்வில் கலந்துகொள்வதற்காக அவர் தனது வழக்கறிஞர் டத்தோ காலித் யூசோப்புடன் வந்ததாகக் காணப்பட்டது.

நிஸாமுடின், புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு துறையின் வகைப்படுத்தப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவு (USJT) அதிகாரிகளால் வாக்குமூலம் பெறப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குமூலம் அளித்து முடித்த பிறகு, அவர்மீது தொடர்புபடுத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விளக்குவதற்காக புக்கிட் அமான் வளாகத்தின் வெளியே செய்தியாளர் சந்திப்பு நடத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு வெளியான செய்திகளில், அரசாங்கத்தைக் கவிழ்க்க முயன்றதாக உள்ள குற்றச்சாட்டைப் பற்றிய விசாரணைக்கு வழிவகுத்த போலிஸ் புகாரில் பெயர் குறிப்பிடப்பட்ட இரு வழக்கறிஞர்களில் ஒருவராக நிஸாமுடின் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்தப் போலிஸ் புகாரில் பெயர் குறிப்பிடப்பட்ட மற்றொரு வழக்கறிஞர் அமீர் ஜாரிஃப் அப்துல்லா ஆவார்.

முன்னதாக, நிஸாமுடின் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, இதை “மிகப் பெரிய பொய்” எனக் கூறியிருந்தார்.

மேலும், தனது தரப்பாளரான நைமா எந்த நேரத்திலும் அரசாங்கத்தைக் கவிழ்க்கவோ அல்லது நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தவோ தனது வழக்கறிஞர் குழுவிற்கு எந்தவித உத்தரவையும் வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இதற்கு முன்பு, நைமா தன்னைக் குறித்த இந்தக் குற்றச்சாட்டைப் பற்றி தனக்கு எதிராக ஒரு போலிஸ் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தியிருந்தார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset