நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போதைப்பொருள் உட்கொண்டு வாகனத்தை செலுத்திய ஆடவருக்கு RM16,000 ரிங்கிட் ஜாமீன்: நீதிபதி கார்த்தினி கஸ்ரன்

முவார்: 

போதைப்பொருள் தாக்கத்தில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டி, இரு உறவினர்களின் உயிரிழப்புக்கு காரணமானதாக கூறப்படும் 39 வயதுடைய லிம் டாவ் யோங் இன்று மூவார் நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுகளுக்கு ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி கார்த்தினி கஸ்ரன் முன்னிலையில் அவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.

முதல் குற்றச்சாட்டின்படி, கடந்த மார்ச் 4-ஆம் தேதி காலை 8.42 மணியளவில் பாகோ பகுதியில் உள்ள ரெஞ்சோங் சாலையில், போதைப்பொருள் தாக்கத்தில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் நோர்மன் அஹமத் (47), அவரது மாமா சாத் காசிம் (77) உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அதிகபட்சம் 1 இலட்சம் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.

மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் 5.15 கிராம் நிமெய்டசெபான் (எரமின் 5), 0.39 கிராம் மெத்தாம்பெட்டமின் வைத்திருந்ததாகவும் இரண்டு தனி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நீதிமன்றம் முதல் குற்றச்சாட்டுக்கு 8,000 ரிங்கிட், மற்ற இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு 8,000 ரிங்கிட் ஜாமீன் வழங்க அனுமதித்தது. மேலும் வழக்கு முடியும் வரை மாதத்திற்கு ஒருமுறை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கு ஜூன் 3 அன்று ஆவணங்கள் சமர்ப்பிக்க மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset