நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான்” (103:1,2) - வெள்ளிச் சிந்தனை

திருக்குர்ஆன் கூறுகிறது: "காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான்” (103:1,2)

ஆறாம் நூற்றாண்டில் இறங்கிய இந்த இறை வசனங்களை எத்தனை பேர் அனுபவ ரீதியாக உணர்ந்திருப்பார்களோ தெரியாது.

காலத்தின் மீது இறைவன் ஏன் சத்தியம் செய்கிறான்? காலம் என்ன அவ்வளவு மகத்தும் மிக்கதா?

ஆம், முழு மனித சமூகமும் பெரும் நஷ்டத்தில்தான் இருக்கிறது என்பதை கொரோனா காலம் நமக்கு கற்றுத் தந்தது.

அது காலம் காட்டித் தந்த காட்சி!

அரபு தேசத்தில் நடைபெறும் இந்தப் போரின் காரணத்தால் இந்த நோன்பு காலத்தில்; அரபு நாடுகளில் இருந்து ஊருக்குத் திரும்ப முடியாமலும், ஊரிலிருந்து அரபு நாடுகளுக்குச் செல்ல முடியாமலும் எத்தனையோ ஆயிரம் பேர் தவிக்கிறார்கள்.

இப்படி நடக்கும் என்று யாரும் கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். நிமிடங்கள் மூலம் கால மாற்றம் எப்படி மாறுகிறது.

இது காலம் காட்டித் தரும் காட்சி!

எத்தனை எத்தனை விமான நிலையங்கள் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கின்றன. முன்னர் நெரிசலில் தவித்தவை இதோ இப்போது ஆளரவமின்றி முடங்கிக் கிடக்கின்றன.

அரபு நாடுகள் இல்லையேல் இந்திய விமான நிலையங்கள்கூட இப்படித்தான் வெறிச்சோடிக் கிடக்கும் என்பதை மத வெறியர்களிடம் யார் எடுத்துச் சொல்வது?

இது காலம் காட்டித் தரும் புதிய காட்சி!

இன்னொரு விஷயம்... இஸ்ரேலில் தவிக்கும் சொந்த குடிமக்களை எங்களால் பாதுகாக்க முடியாது என்று அமெரிக்கா கைவிரித்துவிட்டது எனும் செய்தியையும் பார்க்கிறோம்.

காலம் காட்டித் தரும் புதிய காட்சி இது!

அரபு நாடுகளுக்கு ஐரோப்பியர்கள் வரும்போது எந்த சிரமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஏர்போர்ட்டில் அவர்களுக்கு தனிப் பாதை உண்டு. 

அமெரிக்கர்களுடைய பாஸ்போர்ட்டைக் காண்டால் இருக்கையில் இருந்து சில அரபிகள் துள்ளி எழுந்து சல்யூட் செய்யும் காட்சியையும் காணலாம். 

ஆனால் இப்போது நிலைமை என்ன? 'கிடைக்கும் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி உடனடியாக மேற்கு ஆசியாவை விட்டு வெளியேற வேண்டும்’ என குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறித்தியுள்ளது.

காலம் காட்டித் தரும் நம்ப முடியாத காட்சிகள் இவை. இவ்வாறான பல காட்சிகளையும் காலம் முன்னரும் காண்பித்துள்ளது. 

கோழை போன்று தற்கொலை செய்துகொண்ட ஹிட்லரின் உடல் ஒரு தோட்டத்தில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட காலம்.

ரஷ்யாவில் ஸ்டாலினுடைய சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டு அவற்றின் மீது மக்கள் ஏறி மிதித்த காலம்.

உலகையே தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நாடிய பலரும் இன்று யாருடைய  நினைவிலும் இல்லாமல் மண்ணோடு மண்ணாகிப்போன காலம்.

ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு விதமான பாடத்தைக் கற்றுக்கொடுக்க, அந்த காலம் இப்போதும் எப்போதும் கண்விழித்துக் காத்திருக்கவே செய்கிறது.

காலம் கற்றுத் தரும் பாடத்துக்கு நிகராக எதுவும் இல்லை. அந்த காலத்தின் மீதுதான் அல்லாஹ் சத்தியம் செய்கிறான்.

சற்று சிந்தித்தால் காலம் கற்றுத் தந்த பாடத்தைப் போன்று வேறெதுவும் நமக்குக் கற்றுத் தரவில்லை என்பது புரியும்.

காலத்தின் மீது சத்தியமாக! இதுதான் உண்மை!!

 - நூஹ் மஹ்ழரி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset