நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

சவுதி அரேபிய அரசுக்குச் சொந்தமான ராஸ் தனுரா ஆலை தற்காலிக மூடல்: எண்ணெய் விலை US$100 வரை உயரும் அபாயம்

கோலாலம்பூர்: 

சவுதி அரேபிய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனம் சவூதி அராம்கோவின் ராஸ் தனுரா நிலையத்தில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு US$90 முதல் US$100 வரை உயரக்கூடும் என்று பகுப்பாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான்மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக தெஹ்ரான் மேற்கொண்ட தாக்குதல்களை எதிர்த்து கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்த ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு இந்த நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்த நிலையம் எவ்வளவு காலம் மூடப்பட்டிருக்கும் என்பதே கச்சா எண்ணெய் விலை நகர்வை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும் என்று முதலீட்டு வியூகத்தின் இயக்குனரும் IPPFA Sdn Bhd-இன் பொருளாதார நிபுணருமான முஹம்மத் செடெக் ஜன்தான் தெரிவித்தார்.

24 முதல் 48 மணி நேரத்துக்குள் நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கினால், எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளது. ஒரு வாரம் வரை செயல்பாடு தாமதமானால், எண்ணெய் விநியோகத்தில் கட்டுப்பாடு ஏற்படும்.

“செயல்பாடு தொடங்க ஒரு வார காலமானால் எரிபொருள் கையிருப்பு குறைந்து, கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை இடைவெளி அதிகரிக்கும். இதனால் பிரெண்ட் எண்ணெய் விலை US$82–88 வரை உயரும் அபாயம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

“இந்த இடையூறு கட்டமைப்பு ரீதியான கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி, சவுதி அரேபியாவை உள்நாட்டு தேவைக்கு முன்னுரிமை அளிக்கவும், ஏற்றுமதியைக்  கட்டுப்படுத்தவும் வற்புறுத்தும்.

“இதனால் தற்போதைய விலை எதிர்கால விலையைவிட அதிகமாக இருக்கும்  நிலை அதிகரித்து, பிரெண்ட் எண்ணெய் விலை US$95–100 வரை உயரும். இதனால் ஆசிய நாடுகள் தங்களது மூலோபாய கையிருப்புகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்,” என்றார் அவர்.

இதற்கிடையில், பல வாரங்கள் நீடிக்கும் விநியோக இடையூறு பெரிய விநியோக அதிர்ச்சியை ஏற்படுத்தும் என சர்வதேச அல்-மடீனா பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் பேராசிரியர் எமெரிட்டஸ் டாக்டர் பார்ஜோயாய் பார்டாய் தெரிவித்துள்ளார்.

பிரெண்ட் எண்ணெய் விலை கணிசமாக உயரும் என்றும், மூலோபாய கையிருப்புகளில் இருந்து எண்ணெய் வெளியிடும் நிலை உருவாகலாம் என்றும் அவர் கூறினார்.

“ராஸ் தனுரா, தினமும் சுமார் 5.5 லட்சம் பேரல் எண்ணெயைச் சுத்திகரிக்கும் ஆசிய மேற்குப் பகுதியில் உள்ள மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகும். இது சவுதி எண்ணெயின் முக்கிய ஏற்றுமதி முனையமாகவும் செயல்படுகிறது.

“அதன் மூலோபாய முக்கியத்துவம் காரணமாக, இந்தத் தற்காலிக மூடல் கூட ஏற்றுமதி இடையூறு குறித்த கவலையை அதிகரிக்கும். மேலும், தொடர்ச்சியான தாக்குதல்களும் போக்குவரத்து பாதுகாப்பு குறித்த அச்சமும் அபாயச் செலவை உயர்த்தும்,” என்றார் அவர்.

இந்த இடையூறு நீடித்தால், எண்ணெய் விலை US$90 பேரலை எட்டலாம்  என்றும் அவர் கூறினார்.

“நிலைமை மேம்பட்டாலும், மோதல் அபாயம் அதிகரித்துள்ளதால் அபாயச் செலவு உயர்ந்தே இருக்கும்,” என்றார் அவர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset