நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மலேசிய பொருளாதாரத்திற்கு நல்ல செய்தி: ரிங்கிட் மதிப்பு கணிசமாக உயர்வு

கோலாலம்பூர்: 

மார்ச் 1 2026 நிலவரப்படி அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் ரிங்கிட்டின் மதிப்பு 4.31 சதவீதம், RM3.89 ஆக உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சர் II, டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அஸிசான் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு பொருளாதாரம் வலுவாக இருப்பதையும் 2025 ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (KDNK) வளர்ச்சி 5.2 சதவீதமாக இருந்து ஆரம்ப கணிப்புகளை மீறியதையும் இந்த ரிங்கிட் வலிமை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.

“இந்த வளர்ச்சி பல துறைகளில் குறிப்பாக சேவை, உற்பத்தித் துறைகளில் ஏற்பட்ட விரிவாக்கத்தால் நிகழ்ந்தது. உள்நாட்டு தேவை பொருளாதாரத்தின் முக்கிய இயக்க சக்தியாகத் தொடர்ந்து உள்ளது,” என்றார் அவர்.

உலகளாவிய வளர்ச்சிகள் தொடர்பாக, அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டதும், உலகின் முக்கிய பொருளாதாரங்களில் குறைந்த வட்டி சூழல் நிலவும் என்ற எதிர்பார்ப்பும் ரிங்கிட் வலிமைக்கு ஆதரவாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

“இந்த நிலைமை முதலீட்டாளர்களின் நேர்மறை மனநிலை, உலக வர்த்தகச் சூழல் விரிவடைதல், தொடர்ச்சியான போர்ட்ஃபோலியோ முதலீடு, வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) வருவதாலும் ஊக்குவிக்கப்படுகிறது,” என்றார்.

அரசு மேற்கொண்டுவரும் சீர்திருத்த நடவடிக்கைகள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்து பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“2025 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டு KDNK வளர்ச்சி 6.3 சதவீதமாக பதிவாகி, கடந்த மூன்று ஆண்டுகளில் உயர்ந்த அளவாகவும், ஆரம்ப கணிப்புகளை மீறியதாகவும் இருந்தது.

“இதன் காரணமாக, 2025 ஆம் ஆண்டின் மொத்த KDNK வளர்ச்சி 5.2 சதவீதமாக (2024: 5.1 சதவீதம்) உயர்ந்து, அரசின் அதிகாரப்பூர்வ கணிப்பு 4 முதல் 4.8 சதவீதத்தை மீறியுள்ளது,” என்றார் அவர்.

அரசியலின் சீரான நிலைப்பாட்டினால் பொருளாதார கொள்கைகள் தெளிவாகவும் தொடர்ச்சியாகவும் செயல்படுத்தப்பட முடியும் என்றும் அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset