நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

2 பில்லியன் டொலர் திட்டம்; டிஜிட்டல் மையமாக உருவாகும் மலேசியா: டத்தோ ஸ்ரீ அன்வார்

கோலாலம்பூர்: 

மலேசியாவில் கூகுள் மேற்கொண்டு வரும் 2 பில்லியன் அமெரிக்க டொலர் (9.4 பில்லியன் ரிங்கிட்) முதலீட்டு திட்டம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக முன்னேறி வருவதாக பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.

இன்று காலை, ஆல்பாபெட், கூகுளின் தலைமை முதலீட்டு அதிகாரி ரூத் போராட் தலைமையிலான குழுவுடன் காணொளி மாநாடு நடத்தி, திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ததாக அவர் கூறினார்.

2024 மே மாதத்தில் அறிவிக்கப்பட்ட இந்த முதலீடு, மலேசியாவில் கூகுளின் முதல் தரவு மையம், கிளவுட் கணினி சேவை கட்டமைப்பை உருவாக்கி இயக்குவதை உள்ளடக்கியது. திட்டம் வலுவாக முன்னேறி வருவதுடன், ஆரம்ப எதிர்பார்ப்புகளை மீறியுள்ளது என பிரதமர் தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டார்.

இந்த முயற்சி முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தவுடன், 2030-ஆம் ஆண்டுக்குள் 3.2 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தி, 26,500 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவின் டிஜிட்டல் பொருளாதார அமைப்பின் மீது கூகுள் காட்டும் நம்பிக்கையின் வெளிப்பாடாக இந்த முதலீட்டை அன்வர் இப்ராஹிம் விவரித்தார்.

பாதுகாப்பான தரவு பரிமாற்றம், மேகக் கணினி, செயற்கை நுண்ணறிவு துறைகளில் மலேசியாவை உயர்ந்த மையமாக மாற்றும் அரசின் நோக்கத்துடன் இது ஒத்துப்போகிறது என்றும் அவர் கூறினார்.

அறிவிக்கப்பட்ட முதலீடுகளுக்கு தேவையான முழு ஆதரவை அரசு தொடர்ந்து வழங்கும் என்றும், மலேசியாவில் மேலும் புதிய வாய்ப்புகளை ஆராய கூகுள் முன்வருவதை அரசு வரவேற்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset