நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஓய்வுபெற்ற பெண்ணிடம் RM10,000 மோசடி: மயக்கி ஏமாற்றிய கும்பல்

அம்பாங் ஜெயா: 

70 வயதுடைய ஓய்வுபெற்ற அரசுப் பணியாளர் பெண் ஒருவர், லாட்டரி சீட்டு பரிசுத் தொகையை மீட்டெடுக்க உதவுவதாகக் கூறி ஏமாற்றப்பட்டதில் RM10,000 இழந்துள்ளார்.

நேற்று காலை 11 மணியளவில்,  டத்தாரான் பண்டான் பிரிமாவில் உள்ள ஒரு பேரங்காடியின் ஈர உணவு சந்தை பகுதியில் இருந்தபோது, கணவன்-மனைவி, இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு பெண் ஆகிய மூவர் அந்த முதியவரை அணுகியதாக அம்பாங் ஜெயா மாவட்ட காவல் துறை தலைவர், உதவி ஆணையர் கைருல் அன்வார் காலித் தெரிவித்தார்.

அந்த இந்தோனேசியப் பெண், RM300,000 மதிப்புள்ள லாட்டரி சீட்டைக் காட்டி, அடையாள அட்டை இல்லாத காரணத்தால் அதை மீட்டெடுக்க முடியவில்லை என்றும், உதவினால் பரிசுத் தொகை வழங்குவதாகவும் கூறி உதவி கேட்டுள்ளார்.

“அதன் பின்னர், சந்தேகநபர் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பிடித்துக் கொண்டு, அவருக்கு மயக்கம் ஏற்பட்டது போல உணர வைத்தார். இதனால் அவர் உதவ சம்மதித்து, மூவரையும் பின்தொடர்ந்து சாம்பல் நிற புரோட்டான் வாஜா காரின் அருகில் சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் அம்பாங் பாயிண்ட் உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் ஒரு உணவகத்தின் பின்புறத்தில், சந்தேகநபர்களில் ஒருவர் லாட்டரி சீட்டைக் காசோலையாக மாற்றி, பாதிக்கப்பட்டவர் தப்பிச் செல்ல மாட்டார் என்பதற்காக RM30,000 உத்தரவாதம் கேட்டார்,” என்று அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரிடம் பணம் இல்லாததால், சுமார் RM10,000 மதிப்புள்ள தங்க சங்கிலி, வளையல்களை உத்தரவாதமாக வழங்கினார்.

“பின்னர், காசோலையைப் பணமாக்குவதாகக் கூறி அவரை மேபேங்க் அம்பாங் பாயிண்ட் வங்கிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், காரிலிருந்து இறக்கிவிட்ட பிறகு, மூவரும் தப்பிச் சென்றனர்.

இந்த வழக்கு, குற்றச் சட்டம் பிரிவு 420ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset