நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீனப் பெருநாள் கொண்டாட்ட காலகட்டத்தின்போது திரங்கானுவில் ஒரே வாரத்தில் 10 உயிர் இழப்பு

கோலா திரங்கானு: 

பிப்ரவரி 13 முதல் 19 வரை சீனப் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது, பெரும்பாலும் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் தொடர்புடைய விபத்துகளால் 10 மரணங்கள் பதிவாகியுள்ளதாகத் திரங்கானு சாலை போக்குவரத்து துறை (JPJ) தெரிவித்துள்ளது.

இந்த நிலைமை மிகவும் கவலைக்கிடமானது என்றும், இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு எதிரான கண்காணிப்பும் சட்ட அமலாக்கமும் கடுமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் திரங்கானு மாநில JPJ இயக்குநர் முஹம்மத் சம்ரி சமியோன் கூறினார்.

“சாலை விபத்து மரணங்களில் சுமார் 60 சதவீதம் இருசக்கர வாகன ஓட்டுநர்கள், பின்னால் அமர்வோர் தொடர்புடையவையாக உள்ளன. ஏழு நாட்களில் 10 உயிரிழப்புகள் என்பது மிகுந்த கவலை அளிக்கிறது.

“எனவே, சாலை விதிமுறைகளைப் பின்பற்றும் விஷயத்தில், குறிப்பாக இருசக்கர வாகனங்கள் தொடர்பாக, எவ்வித சமரசமும் இருக்காது. ஏனெனில் அவற்றில் விபத்து அபாயம் அதிகம்,” என்று அவர் நேற்று இரவு நகரைச் சுற்றியுள்ள பல பகுதிகளில்  நடைப்பெற்ற “2026 சிறப்பு இருசக்கர வாகன நடவடிக்கை” (Operasi Khas Motosikal 2026)-யின் முடிவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டுதல், காலாவதியான வரி, காப்பீடு இல்லாமை, குறைந்த வயதில் ஓட்டுதல், தீவிரமான மாற்றங்கள் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் போன்ற முக்கிய குற்றங்களைக் குறிவைத்து நடத்தப்பட்டது.

“காலாவதியான சாலை வரி (896 வழக்குகள்) அதிகமாக பதிவான குற்றமாக உள்ளது. அதனைத் தொடர்ந்து காப்பீடு இல்லாமை (885), உரிமம் இல்லாமல் ஓட்டுதல் (871), குறைந்த வயதில் ஓட்டுதல் (79), தீவிர மாற்றங்கள் (89) ஆகியவை உள்ளன,” என்றார் அவர்.
மேலும், தலைக்கவசம் அணியாதவர்கள் (371 வழக்குகள்), சமிஞ்சை விளக்குகளைப் பின்பற்றாமலிருத்தல் (78), வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்துதல் (1) ஆகியவற்றுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இளைஞர்களிடையே நடைபெறும் சட்டவிரோத பந்தயங்கள் (ரேஸ்) முக்கிய கவனத்தில் இருப்பதாகவும், அவை ஓட்டுநர்களுக்கும் மற்ற சாலை பயனாளர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் தொடர்ந்து பேசிய அவர் கூறினார்.

பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும் என்றும், குறிப்பாக இருசக்கர வாகனம் ஓட்டும் பிள்ளைகள் ஆபத்தான செயல்களில் ஈடுபடாமல் இருக்க கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“சாலை விபத்துகளையும் உயிரிழப்புகளையும் குறைப்பதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். அதேபோல், சாலை பாதுகாப்பு குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வும் அதிகரிக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset