நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 3ஆவது முறையாக மலேசியா வருகை: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை சந்திக்கிறார்

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 7, 8ஆம் தேதிகளில் மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொள்ள உள்ளார்.

இது மலேசியாவிற்கான இந்தியப் பிரதமரின் மூன்றாவது வருகையாகும்.

கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா, மலேசியா இருதரப்பு உறவு விரிவான மூலோபாய கூட்டாண்மையாக உயர்ந்தபின் இந்தியப் பிரதமர் முதல் முறையாக மலேசியா வருகிறார்.

இந்தப் பயணத்தின் போது ​​பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார்.

மேலும் அவர் இங்குள்ள இந்திய சமூக தலைவர்கள், தொழில், வணிகப் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடவுள்ளார்.

இந்தியப் பிரதமரின் வருகையுடன் இணைந்து 10ஆவது இந்தியா-மலேசியா தலைமை நிர்வாக அதிகாரி மன்றமும் நடைபெற உள்ளது.

இந்தியாவும் மலேசியாவும் வரலாற்று, நாகரிக, கலாச்சார தொடர்புகளை அடிப்படையாகக் கொண்ட நீண்டகால நட்புறவைப் பகிர்ந்து கொள்கின்றன.

உலகின் மூன்றாவது பெரிய நாடான மலேசியாவில் 2.9 மில்லியன் வலுவான இந்திய புலம்பெயர்ந்தோர் இருப்பதால் இந்த உறவு மேலும் வலுப்படுத்தப்படுகிறது.

இந்தியா-மலேசியா உறவு பன்முகத்தன்மை கொண்டதுடன் வளர்ந்து வருகிறது. 

இந்தியப் பிரதமரின் வருகை வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, இலக்கவியல், நிதி தொழில்நுட்பம், எரிசக்தி, சுகாதாரம், கல்வி, கலாச்சாரம், சுற்றுலா, மக்களிடையேயான உறவுகள் வரை இருதரப்பு ஒத்துழைப்பின் முழு வரம்பையும் மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பாக இரு தலைவர்களுக்கும் உதவுகிறது.

அத்துடன் பரஸ்பர நன்மைக்காக எதிர்கால ஈடுபாட்டிற்கான பாதையை அமைக்கவும் உதவுகிறது என இந்திய அரசு வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset