நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குச்சாய் லாமாவில் போக்குவரத்து வளாகங்களைப் பயன்படுத்தி அன்னிய நாட்டுக் கடத்தல் கும்பலை குடிநுழைவுத் துறை முறியடித்தது

கோலாலம்பூர்:

மலேசிய குடிநுழைவுத் துறை (JIM), குச்சாய் லாமாவில் உள்ள தங்குமிடங்களை இடைநிலையமாக பயன்படுத்தி செயல்பட்ட அன்னியத் தொழிலாளர்கள் கடத்தல் கும்பலை, பிப்ரவரி 1 அன்று நடத்திய சிறப்பு நடவடிக்கையின் மூலம் முறியடித்தது.

‘கேங் சோஜுல்’ என்ற பெயரில் இயங்கிய இந்த கும்பலுக்காகப் போக்குவரத்து ஏற்பாடு செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு மலேசியரும், ஒரு வங்காள தேச  குடிமகனும் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத் துறையின் இயக்குநர் ஜெனரல் டத்தோ சக்காரியா ஷபான் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 20 வெளிநாட்டு குடிமக்களும் கைது செய்யப்பட்டனர்.

“முதல் கட்டச் சோதனை பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெற்றது. குச்சாய் லாமா சாலையில் உள்ள ஒரு பேரங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில், குடியேற்றத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு 4X4 வாகனமும், ஒரு SUV வாகனமும் தடுத்து நிறுத்தப்பட்டன.

அச் சோதனையில், வங்காள தேசத்தைச் சேர்ந்த ஆறு ஆண்கள், ஒரு பெண், ஒரு மியான்மர் ஆண் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, குச்சாய் லாமாவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில், அக் கும்பலின் மறைவிடமாகவும் இடைநிலைய மையமாகவும் செயல்பட்டு வந்த ஒரு வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

அதில், அண்டை நாட்டிலிருந்து சமீபத்தில் வந்ததாகவும், தெற்கு மாநிலங்களுக்கும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிக்கும் அனுப்பப்பட காத்திருந்ததாகவும் சந்தேகிக்கப்படும் 12 வங்காள தேச ஆண்கள் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் 18 முதல் 49 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்,  4X4, SUV வாகனங்கள், சில வங்காள தேச கடப்பிதழ்கள், RM82,100 பணம், USD3,700 வெளிநாட்டுப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதான அனைவரும் மேலதிக விசாரணைக்காக புத்ராஜெயா குடிநுழைவு தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது மனிதக் கடத்தல், குடியேற்றக் கடத்தல் தடுப்பு சட்டம் 2007 (ATIPSOM), குடிநுழைவு சட்டம் 1959/63, குடிநுழைவு விதிமுறைகள் 1963, கடப்பிதழ் சட்டம் 1966 ஆகியவற்றின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட கும்பல் 2025 டிசம்பர் மாதம் முதல் செயல்பட்டு வருவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று மேலும் பேசிய அவர் தெரிவித்தார்.

நாட்டின் மூன்றாவது வழியாக வெளிநாட்டவர்களைக் கொண்டு வந்து, பின்னர் கிளந்தான் வழியாகச் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழையச் செய்துள்ளனர்.

பின்னர் அவர்கள் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, குறிப்பிட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

ஒவ்வொரு நபரிடமும் சுமார் RM12,000 வசூலிக்கப்பட்டதாகவும், இதன் மூலம் அக்கும்பல் சுமார் RM1.2 மில்லியன் லாபம் ஈட்டியதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய குற்றம் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் என்று JIM எச்சரித்துள்ளது.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset