நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இளையோர் பாதுகாப்புக்கு புதிய சட்டம்: சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு 16 வயது வரம்பு நிர்ணயம்

கூலாய்:

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 16 ஆண்டுகளாக நிர்ணயிக்கும் சட்ட அமலாக்கம், இவ்வருடம் ஜூலை மாதத்திலிருந்து தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுவர்களும் இளைஞர்களும் சமூக ஊடகங்களில் தவறான உள்ளடக்கங்களுக்குப் பாதிக்கப்படுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தகவல் தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.

“முழுமையான அமலாக்கத்திற்கு முன் சிறந்த முறையை அரசாங்கம் சோதனை செய்யும் வகையில், தற்போது இது ‘ரெகுலேட்டரி சாண்ட்பாக்ஸ்’ (regulatory sandbox) கட்டத்தில் உள்ளது.

“இது இணைய பாதுகாப்பு சட்டம் (Online Safety Act – OnSA) உடன் செயல்படுத்தப்படுகிறது. மேலும், மிகச் சிறந்த, பயனுள்ள அணுகுமுறையை கண்டறிவதற்காக சமூக ஊடக தள வழங்குநர்களுடன் கலந்துரையாடல்கள் தொடங்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார். 

கூலாயில் உள்ள தேசிய வகை புத்ரா உத்தாமா பள்ளியில் நடைபெற்ற ஆரம்ப பள்ளி உதவி (Bantuan Awal Persekolahan – BAP) வழங்கும் நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

“தற்போது, தள வழங்குநர்களுடன் இணைந்து கலந்துரையாடலில் இருக்கிறோம். இவ்வருடத்தின் மூன்றாம் அல்லது நான்காம் காலாண்டில் இதனை நடைமுறைப்படுத்துவதே எங்களின் இலக்காகும்.

"இது முன்பே தகவல் தொடர்பு அமைச்சர், டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் அறிவித்த திட்டத்துடன் ஒத்துள்ளது,” என்று கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நீ சிங் கூறினார்.

சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவதற்கானக் குறைந்தபட்ச வயதை 16 ஆண்டுகளாக அமல்படுத்தும் நோக்கில், 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டின் முடிவுக்குள் அனைத்து சமூக ஊடக தளங்களும் பயனர் அடையாளத்தை டிஜிட்டல் முறையில் உறுதிப்படுத்தும் (eKYC) முறையைச் செயல்படுத்த வேண்டும் என அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதனிடையே, மடானி அரசாங்கம், கல்வி அமைச்சின் (KPM) மூலம், இவ்வருடம் ஆரம்ப பள்ளி உதவி (BAP) திட்டத்திற்காக RM800 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன் மூலம், நாடு முழுவதும் ஆண்டு ஒன்று முதல் ஸ்.டி.பி.ம் வரை பயிலும் 5.2 மில்லியன் மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஜோகூர் மாநிலத்தில் மட்டும் 586,153 மாணவர்கள் பயனடைந்துள்ளதாகவும், அதற்காக RM87.9 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நீ சிங் கூறினார்.

இந்த மாவட்டத்தில் 58,264 மாணவர்கள் பயனடைந்துள்ளதுடன், மொத்தமாக RM8.7 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“அதனால் இன்று, தேசிய வகை புத்ரா உத்தாமா பள்ளிக்கு  வந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பெற்றோருக்கு இந்த உதவியை வழங்கியுள்ளோம்,” என அவர் கூறினார்.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset