நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பகலில் ஐஸ் லாரி ஓட்டுநர், இரவில் கொள்ளையன்: ஜொகூரில் 16 சம்பவங்கள் அம்பலம்

பொன்டியன்: 

பகல் நேரங்களில் சாதாரணமாக ஐஸ் லாரி ஓட்டுநராக வாழ்ந்துவந்த ஒருவரின் இரட்டை வாழ்க்கை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த நபர், ஜொகூர் மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் உள்ள அரசாங்க அலுவலகங்களிலும் வீடுகளிலும் நடைபெற்ற 16 சம்பவங்களின் முக்கிய குற்றவாளி என போலீசார் தெரிவித்துள்ளனர்.

42 வயதுடைய இந்த சந்தேக நபர், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்கூடாயில் உள்ள யுனிவர்சிட்டி பகுதியில் உள்ள ஒரு ஐஸ் தொழிற்சாலையில், பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல்களிலும், துல்லியமான உளவுத் தகவல்களின் அடிப்படையிலும் கைது செய்யப்பட்டார்.

பொன்டியன் மாவட்ட போலீஸ் தலைவர், சுபரிண்டெண்ட் ஹட்ஸ்ரத் ஹுசைன் மியான் ஹுசைன் கூறுகையில், திருமணமாகி இரண்டு பிள்ளைகளைக் கொண்ட இந்த நபர், தேசிய தகவல் பரவல் மையம் (NADI), விவசாயிகள் சங்க வாரியம் (LPP) அலுவலகங்களை குறிவைத்ததாக தெரிவித்தார். அந்த இடங்களில் பணமும் எளிதில் திறக்கக்கூடிய பாதுகாப்புப் பெட்டிகளும் இருப்பதாக நம்பியதாலேயே அவற்றை கொள்ளையடிக்க தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது.

“சந்தேக நபர் தனியாகவே செயல்பட்டுள்ளார். முதலில் மின்சார விநியோகத்தை துண்டித்து பாதுகாப்பு அமைப்புகளை செயலிழக்கச் செய்து, பின்னர் அந்த வளாகங்களில் உட்புகுந்துள்ளார்,” என அவர் இன்று பொன்டியன் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஆரம்பகட்ட விசாரணையில், சந்தேக நபர் 13 தேசிய தகவல் பரவல் மைய அலுவலகங்களிலும், இரண்டு விவசாயிகள் சங்க வாரிய அலுவலகங்களிலும், ஒரு குடியிருப்பு வீட்டில் கொள்ளையில்  ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

“இந்த சம்பவங்களால் ஏற்பட்ட மொத்த நஷ்டம் சுமார் RM24,000 என மதிப்பிடப்பட்டுள்ளது,” என அவர் தெரிவித்தார்.

மேலும், சந்தேக நபருக்கு இதற்கு முன்னர் நான்கு குற்றப் பதிவுகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. தற்போது, குற்றச் சட்டம் பிரிவு 457-யின் கீழ் விசாரணைக்காக, அவர் ஜனவரி 2 வரை ஆறு நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset