நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்பின் செய்தியை உலகம் முழுவதும் பரப்பும் ஒரு சிறப்பு வாய்ந்த திருநாளாக கிறிஸ்துமஸ் விளங்குகிறது: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

அன்பின் செய்தியை உலகம் முழுவதும் பரப்பும் ஒரு சிறப்பு வாய்ந்த திருநாளாக கிறிஸ்துமஸ் விளங்குகிறது.

மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் இதனை கூறினார்.

இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை நினைவுகூரும் இந்த புனித கிறிஸ்துமஸ் நாளில் உங்கள் அனைவரின் வாழ்க்கையும் அன்பு, கருணை, அமைதி, ஒற்றுமை, நம்பிக்கையால் நிரம்பி விளங்க  வேண்டும்.

மனித நேயம், சகோதரத்துவம், தியாகம் போன்ற உயரிய பண்புகளை உலகிற்கு எடுத்துச் சொன்ன இயேசுவின் போதனைகள், இன்றைய காலகட்டத்தில் இன்னும் அதிகமாக தேவைப்படுகின்றன.

கிறிஸ்துமஸ் என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, அது மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கும் ஓர் ஆன்மீகப் பிணைப்பாகவும் திகழ்கிறது.

மதம், இனம், மொழி என்ற எல்லைகளைக் கடந்து, அன்பின் செய்தியை உலகம் முழுவதும் பரப்பும் ஒரு சிறப்பு வாய்ந்த திருநாளாக கிறிஸ்மஸ் விளங்குகிறது.

அந்த வகையில், பல இனங்கள்,  பண்பாடுகள் இணைந்து வாழும் நமது மலேசிய நாட்டில், ஒற்றுமையும் பரஸ்பர மரியாதையும் மேலும் வலுப்பெற இந்த நாள் ஓர் அழகிய நினைவூட்டலாக அமைகிறது.

வருட இறுதி மாதம் என்றாலே அது கொண்டாட்டங்கள், விடுமுறைகள், குடும்பச் சந்திப்புகள், உறவுகளோடு ஒன்றுகூடல் என மகிழ்ச்சியால் நிறைந்த மாதமாக இருக்கிறது.

பொது விடுமுறைகள், சொந்த விடுமுறைகள் என பலரும் தங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வதும், நீண்ட நாட்களாகக் காணாத உறவுகளைச் சந்திப்பதும் இந்த மாதத்தின் தனிச்சிறப்பாகும்.

கிறிஸ்மஸ் தினத்தைத் தொடர்ந்து வரும் ஆங்கிலப் புத்தாண்டு, உலக மக்கள் அனைவரும் ஒன்றாகக் கொண்டாடும் ஒரு புதிய தொடக்கத்தின் சின்னமாகத் திகழ்கிறது.

கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடம் கற்று, புதிய நம்பிக்கைகள், புதிய இலக்குகள், புதிய கனவுகளோடு முன்னேறும் ஒரு வாய்ப்பாக இந்த புத்தாண்டு அமையட்டும்.

இந்த தொடர் கொண்டாட்டங்களை அனைவரும் பாதுகாப்பாகவும், பொறுப்புடனும், உறவுகளோடு மகிழ்ச்சியாகவும் கொண்டாட வேண்டும் என்பதே என் வேண்டுகோள். இந்த புனித நாளிலும், வரவிருக்கும் புத்தாண்டிலும், உங்கள் குடும்பங்களுக்கும், உங்கள் எதிர்காலத்திற்கும் நல்ல ஆரோக்கியம், மனநிறைவு, அமைதி மற்றும் வளம் கிடைக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மலேசியா தொடர்ந்து அமைதியும் ஒற்றுமையும் நிலவும் ஒரு சிறந்த நாடாகத் திகழ, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

மீண்டும் ஒருமுறை,மலேசியர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset