நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

‘இந்தியா’ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை: 

இந்தியா கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது, மக்களாட்சியை காக்க வெற்றி பெற்று வர வேண்டும் என முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். 

இந்தியாவின் 14வது குடியரசு துணை தலைவராக இருந்தவர் ஜகதீப் தன்கர். இவர் தனது பதவியை கடந்த ஜூலை 21ம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். இவரின் பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் 10ம் தேதி வரை இருந்தது.

இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டியும் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் அனைத்து மாநிலங்களுக்கும் செல்ல ஏற்பாடு செய்துள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் அவரது சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

சென்னை தி.நகரில் உள்ள ஓட்டலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சித் தலைவர்களை சுதர்சன் ரெட்டி சந்தித்து பேசினார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சுதர்சன் ரெட்டி ஆதரவு கோரினார். திமுக சார்பில் முழு ஆதரவு அளிப்பதாக முதல்வர் கூறினார். மேலும் அவருக்கு அய்யன் திருவள்ளுவரின் சிலையை நினைவு பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு தெரிவித்து கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் சுதர்சன் ரெட்டியை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாட்டின் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடக்கூடிய சுதர்சன் ரெட்டியை தமிழ்நாட்டுக்கு வருக, வருக, வருக என வரவேற்கிறேன். திமுகவின் தலைவராக மட்டுமல்ல மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பிலும் முதலில் அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

சுதர்சன் ரெட்டி, அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் உச்ச நீதிமன்ற நீதியரசராக பணியாற்றுகின்ற நீங்கள், இந்திய குடியரசு துணை தலைவர் பொறுப்புக்கு மிகவும் தகுதிவாய்ந்தவர். அதனால்தான், இந்தியா கூட்டணி சார்பில், உங்களை வேட்பாளராக அறிவித்திருக்கிறோம். உங்களை ஒருமனதாக தேர்ந்தெடுத்து அறிவித்த இந்தியா கூட்டணியின் அனைத்து தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா கூட்டணியினர் மட்டுமில்லை, ஜனநாயகத்தின் மீது மக்களாட்சி தத்துவத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்ற அத்தனை பேரும் உங்களைத்தான் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

தென் மாநிலத்தைச் சேர்ந்த இவருடைய புரோபைலை எல்லோரும் கவனிக்கவேண்டும். உஸ்மானியா யூனிவர்சிட்டியில் சட்டம் பயின்று, 1971ல் வழக்கறிஞராக ப்ராக்டிஸ் செய்ய தொடங்கினார். பின்னர், ஆந்திர மாநில அரசு வழக்கறிஞர்-ஒன்றிய அரசின் கூடுதல் நிலை ஆலோசகர்-ஆந்திர மாநில உயர் நீதிமன்ற நீதிபதி- கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்று படிப்படியாக தன்னுடைய கேரியரில் முன்னேறி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பு வகித்து, இன்றைக்கு குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக உயர்ந்திருக்கிறார்.

இவர் நீதியரசராக பணியாற்றிய காலத்தில், நேர்மையாக, சுதந்திரமாக செயல்பட்டு, மக்களுடைய உரிமைகளையும், சமூகநீதியையும் உயர்த்திப் பிடித்து, அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பையும் போற்றி பாதுகாத்தவர். பாஜவினர் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்க நினைக்கின்ற இந்த நேரத்தில், அரசியல் சட்டத்தை பாதுகாத்த நீதியரசரான இவர், அதை பாதுகாக்கின்ற பொறுப்புக்கு தேவைப்படுகிறார்.சுதர்சன் ரெட்டியை பொறுத்தவரைக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கக் கூடியவர்.

புதிய தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய மாநாட்டில் அவர் பேசியதை சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், ‘‘புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராடுவது நம்முடைய கடமை. இது இந்த தேசத்துக்கு நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி. இவர்கள் கொண்டுவர நினைக்கின்ற தேசிய கல்விக் கொள்கை மனித மாண்புகளுக்கு எதிரானது. நான் - எனது - என்னுடையது என்ற கலாச்சாரத்தை மட்டுமே இது உருவாக்கும்.

பன்முகத் தன்மையையோ, கல்வியின் ஜனநாயக பரவலையோ இது உருவாக்காது” என்று தன்னுடைய கருத்துகளைப் பதிவு செய்து, தமிழ்நாட்டின் உணர்வுகளை உறுதியுடன் வெளிப்படுத்தினார். இப்படி, அரசியலமைப்புச் சட்டத்துக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும், முற்போக்காகவும், மக்களுக்காகவும் பேசுகின்ற இவரை நாம் முன்மொழிய, இதைவிட பெரிய காரணம் தேவையா? ஆனால், இவரை உள்துறை அமைச்சர் நக்சல் என்று விமர்சிக்கிறார். அவர்களால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியவில்லை.

அந்த கையாலாகாத நிலையை மறைக்க, நீதியரசர் மேல் பழி போட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம், சமூகநீதி, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஒருவர் நமக்கு கிடைத்திருக்கிறார். அவரை ஆதரிப்பதே நமது கடமை. ஆனால், பாஜவோ, தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிரான அத்தனை நடவடிக்கைகளையும் செய்துவிட்டு, தமிழர் என்ற முகமூடியை அணிந்து ஆதரவு கேட்கிறார்கள். எந்த கருத்தியல் மக்களுக்கான, மக்கள் நலனுக்கான கருத்தியலோ, அதைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று முதல்வர் பேசினார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset