
செய்திகள் சிந்தனைகள்
தியாகமே திருநாளாய்... - ஹஜ் சிந்தனை
உலக வரலாற்றில் கிறிஸ்தவ சமூகத்தவரால் ஆபிரகாம் எனும் தீர்க்கதரிசி அவரது மகன் இஸ்மவேல் என்றும் போற்றப்படுவதும் , இஸ்லாமியர்களால் நபி இப்ராஹிம் (அலை) அவரது மகன் இஸ்மாயீல் (அலை ) என்று நம்பிக்கை கொண்ட தந்தை மற்றும் மகனின் வாழ்க்கையில் அன்னை ஹாஜராவோடு தொடர்புடைய தியாகம் நிறைந்த வாழ்வியலை ஆண்டுதோறும் நினைவுபடுத்துவதே பக்ரீத் பண்டிகை மற்றும் அது சார்ந்த நிகழ்வுகள்.
கனவு மூலம் கிடைத்த கட்டளையை நிறைவேற்ற வயதான காலத்தில் பிறந்த ஆண் மகனை அறுத்து பலியிட துணிந்த தந்தை நபி இப்ராஹிம் (அலை), கணவனின் கனவை நிறைவேற்ற மகனை அனுப்பி வைத்த அன்னை ஹாஜரா, தந்தையின் விருப்பத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் பலிபீடத்தில் தலை வைத்த மகன் இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உணர்வுகளை ஆண்டு தோறும் புதுப்பிக்க முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் இறுதியாக ஹஜ் யாத்திரை கடமையாக்கப்பட்டுள்ளது.
உலக முஸ்லிம்களின் இருபெரும் புனித நகரங்களான மக்கா, மதீனா நகரங்களில் ஆண்டு தோறும் குழுமும் பதினைந்து லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள இறுதிக்கடமையை நிறைவு செய்து ஹாஜி என்ற அடைமொழியுடன் தாயகம் திரும்புவது ஒவ்வொருவரின் இகவாழ்வில் மறக்கமுடியாத தருணம்.
தற்போதைய சூழலில் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்கள் மட்டுமே ஹஜ் யாத்திரை மேற் கொள்ள வாய்ப்புள்ள சூழலில், ஹஜ் சார்ந்த கிரியைகள், தவாஃபுகள், ஒன்று கூடல்கள், அழுது கேட்கும் பாவ மீட்சிகள் மூலம் அனைத்து முந்தைய பாவங்களும் மன்னிக்கப்பட்டு திரும்பும் ஹாஜிகள் வாழ்க்கையில் மனமாற்றம் ஏற்படுவது மட்டுமே உயரிய தியாகத்தை போற்றுவதாக அமையும்.
இஸ்லாமிய மார்க்கம் தடை செய்துள்ள விசயங்களில் கவனக்குறைவால் அல்லது அறியாமை காரணமாக ஈடுபட்டவர்கள் இனிமேல் அத்தகைய தவறை செய்ய மாட்டேன் என்று மனமார வெறுத்து ஒதுங்குதல் ஹஜ் யாத்திரை தரும் படிப்பினைகளில் ஒன்று.
இஸ்லாமிய வாழ்வியலில் பாவங்களாக சித்தரிக்கப்படும் பொய் பேசுவது, புறம் பேசுவது, அவதூறு செய்திகளை பரப்புதல் போன்ற தீய செயல்களில் ஈடுபடுவதில்லை என்று சுய கட்டுப்பாடுடன் ஹஜ்ஜிற்கு பிந்தைய காலங்களில் வாழ்க்கையை தொடர்வது கண்ணியம் சேர்க்கும்.
இஸ்லாம் வலியுறுத்தும் அறம் சார்ந்த வியாபார நெறிமுறைகளை பின்பற்றி தரம் குறைந்த பொருட்களை ஏமாற்றி விற்பனை செய்யாமல், எடை அளவில் மோசடி செய்யாமல் நேர்மையாக தொழிலில் ஈடுபடுவது கூட ஹஜ் யாத்திரை மூலம் ஏற்பட வேண்டிய மனமாற்றம் ஆகும்.
இனம் , மொழி, நிறம் வித்தியாசம் இல்லாமல் பல்வேறு நாடுகளிலிருந்து குழுமி தல்பியா முழக்கங்களோடு ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து, உதவி செய்து பரிசுத்தமான நினைவுகளுடன் திரும்புபவர்கள் அண்டை அயலாரை நேசித்தல், பெற்றோரை பேணுதல், அநாதைகளை ஆதரித்தல் உட்பட மார்க்கம் வலியுறுத்தும் ஒழுக்கம் சார்ந்த கண்ணியமான வாழ்வியலை பின்பற்றி பிந்தைய வாழ்க்கையை தொடர்வது மட்டுமே இறுதிக்கடமையை நிறைவு செய்ததற்கு அர்த்தமுள்ளதாகும்.
#தியாகம்
நினைவு கூர்ந்து கொண்டாட மட்டுமல்ல..
அன்றாட வாழ்க்கையில் பின்பற்றிடவும்தான்.
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்...
- குளச்சல் அஜீம்
தொடர்புடைய செய்திகள்
June 13, 2025, 8:03 am
பேசத் தயங்கும் வலிமிகுந்த இதயங்கள் - வெள்ளிச் சிந்தனை
June 6, 2025, 6:48 am
அந்தக் கல்லை பத்திரமாக திருப்பி அனுப்பிய மலேசியப் புனிதப் பயணி - வெள்ளிச் சிந்தனை
May 23, 2025, 8:06 am
ஹஜ் ஒரு மகத்தான பாக்கியம் - வெள்ளிச் சிந்தனை
May 5, 2025, 9:12 am
எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை - ஜென்னி மார்க்ஸ்: இன்று கார்ல் மார்க்ஸ் நினைவு நாள்
May 2, 2025, 8:08 am
இறையுதவி கிடைக்குமா கிடைக்காதா என ஏங்கித் தவிக்கும் தருணங்கள் - வெள்ளிச் சிந்தனை
May 1, 2025, 6:28 am
உழைப்பு என்பது... உழைப்பாளர் தின சிந்தனை
April 25, 2025, 8:26 am
உழைப்பில் இனிமை கண்ட உத்தமர்கள்..! - வெள்ளிச் சிந்தனை
April 11, 2025, 7:14 am