
செய்திகள் மலேசியா
ரோன் 95 பெட்ரோலுக்கான மானியத் தொகை குறைக்கப்படும்: நிதியமைச்சகம் உறுதி
கோலாலம்பூர்:
2025-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ரோன் 95பெட்ரோலுக்கான மானியத் தொகை குறைக்கப்படும் என்று நிதியமைச்சம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
பொருளாதார சவால்களை எதிர்க்கொள்ள இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும்,ரோன் 95 பெட்ரோலுக்கான மானியத் தொகையைக் குறைப்பதன் வாயிலாக அரசாங்கம் ஆண்டுக்கு சுமார் RM8 பில்லியன் ரிங்கிட்டைச் சேமிக்க இயலும் என்றும் நிதியமைச்சகம் சுட்டிக் காட்டியது.
இந்தத் தொகை சமூக நலத்திட்டங்களில் பயன்படுத்தப்படும்.
அதுமட்டுமல்லாமல், நிதியமைச்சகம் இரட்டை விலை முறையைப் பயன்படுத்தவுள்ளது.
இரட்டை விலை முறைமை என்பது, உயர்ந்த வருமானம் உள்ளோர் சந்தை விலைக்கு பெட்ரோல் வாங்க, மற்றவர்கள் மானிய விலையை பெறும் வகையில் அமையும் விலை அமைப்பாகும்.
யாருக்கு மானியம் வழங்குவது என்பதைத் தீர்மானிக்க பெரும் தரவுகள் தேவைப்படுவதாக நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பெட்ரோல் நிலையங்களில் மாறுபட்ட விலையை நிர்வகிக்க தொழில்நுட்ப வசதிகள் தேவைப்படும்.
பெரும்பாலான மலேசியர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தாது என்று அரசு உறுதி அளிக்கிறது.
நாட்டின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
- அஸ்வினி செந்தாமரை