நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.6 ஆயிரம் வெள்ள நிவாரணம்; மழையில் கதவை சாத்தி அமர்ந்திருந்த அண்ணாமலை தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை ஒன்றியத்திடம் வாங்கித்தருவாரா?: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: 

மிக்ஜாம் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். 

இதுதொடர்பாக, தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: 

மிக்ஜாம் புயல், பெருமழைக்கு பின்னர் சென்னை மாநகரம் தற்போது மீண்டெழுந்து உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், முதல்வர் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் அவரது ஈடுபாட்டின் காரணமாக சென்னைக்கு வர இருந்த பேராபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. புயலுக்கு பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக இன்றைக்கு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு முழுமையாக திரும்பி இருக்கிறார்கள்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு முதல்வர் நிவாரண தொகையாக ரூ.6 ஆயிரம் அறிவித்துள்ளார். இது பொதுமக்களிடையே வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் தாங்கி கொள்ள முடியாமல் தமிழ்நாட்டில் இருக்கும் சில எதிர்க்கட்சிகள் அரசின் மீது விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். கடந்த 2021ம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்த போது, தமிழ்நாடு கொரோனாவின் கொடும்பிடியில் சிக்கி இருந்தது. அன்றைக்கு வடமாநிலங்களில் கங்கையில் பிணங்கள் மிதந்து கொண்டிருந்தன.

டெல்லி மாநகரத்தில் உள்ள மருத்துவமனைகளில் எல்லாம் ஆக்சிஜன் கிடைக்காமல் மக்கள் அவதி அடைந்தார்கள். அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் முதல்வரின் சீரான தலைமையில் அவரது முழு ஈடுபாட்டோடு கொரோனா பேரிடர் நடவடிக்கைகளை திமுக அரசு மிக சிறப்பாக மேற்கொண்டது. முதல்வரே கவச உடை அணிந்து கொண்டு கொரோனா வார்டுக்குள் சென்று நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

டெல்லியில் உட்கார்ந்துகொண்டு மணியை ஆட்டுங்கள், கையை தட்டுங்கள் என்று சொல்லவில்லை. களத்தில் இறங்கி முதல்வர் பணியாற்றினார் என்பதை நாம் மறந்துவிட முடியாது. ஒரு இயற்கை பேரிடர் ஏற்பட்டால் எப்படி கையாள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திமுக அரசு அன்றைக்கு செயல்பட்டது.

கொரோனா பேரிடரை எதிர்கொண்டது போன்றுதான் இந்த பேரிடரிலும் திமுக அரசு முன்னணியில் இருந்து போராடியது. தலைவன் என்பவன் முன்னணியில் இருந்து போராடுபவனாக இருக்க வேண்டும். முதல்வர் கொரோனா பேரிடரில் எப்படி முன்னணியில் இருந்தாரோ, அதேபோன்று இந்த பேரிடரிலும் முதல்வர் முழுமையாக களத்தில் இருந்தார். 

‘எங்களுக்கு ஓட்டு போட்டவர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள். எங்களுக்கு ஓட்டு போடாதவர்கள் ஏன் வாக்களிக்கவில்லை என்று நிச்சயம் வருத்தப்படும் வகையில் எங்களுடைய பணிகள் இருக்கும்’ என்று முதல்வர் ஏற்கனவே சொல்லி இருக்கிறார்.

இந்த வெள்ளத்திலும் அரசியலை பார்க்காமல் அனைவருக்கும் திமுக அரசு ஒட்டுமொத்தமாக களம் இறங்கி இந்த பேரிடரை சமாளித்து இருக்கிறது.

சென்னை மாநகரை பொறுத்தவரையில் 2015ம் ஆண்டு வந்த வெள்ளப்பெருக்கை அன்றைய ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு மோசமாக கையாண்டார்கள் என்பதையும், தற்போது தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக இன்றைக்கு உயிரிழப்புகள், சேதாரம் தவிர்க்கப்பட்டுள்ளது என்பதை ஆங்கில பத்திரிகையின் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சென்ற ஆட்சியில் ஜெயலலிதா படத்தையோ, எடப்பாடி பழனிசாமி படத்தையோ போட்டு நிவாரண பொருட்கள் வழங்கியது போன்று இந்த ஆட்சியில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டக்கூடிய வேலைகளை செய்யாமல் நிவாரண பொருட்களை வழங்கி கொண்டிருக்கிறோம்.

2015ம் ஆண்டு வெள்ளம் வந்தபோது அதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். வெள்ள சேதத்தை பார்த்து அமெரிக்கா போன்ற நாடுகள் தமிழ்நாட்டுக்கு செல்லாதீர்கள் என்று சொல்லக்கூடிய வகையில் நிலைமை மோசமாக இருந்தது.

அப்போது நிவாரண பணிகளில் ஒருங்கிணைப்பு இல்லை என்று ஐகோர்ட் சுட்டிக்காட்டியது. 2015ம் ஆண்டு மழை நிவாரண பணிகளுக்கு ரூ.10,250 கோடி நிதி வேண்டும் என்று அன்றைய முதல்வர் ஜெயலலிதா ஒன்றிய அரசிடம் கேட்டார். அவர் அன்றைக்கு மக்களுக்கு வழங்கிய நிவாரண தொகை ரூ.5 ஆயிரம்.

இன்றைக்கு ரூ.5,200 கோடிதான் கேட்டிருக்கிறோம். ஆனால் ரூ.6 ஆயிரம் நிவாரணமாக வழங்குகிறோம். இந்த நிவாரணத்தை ஒன்றிய அரசுதான் வழங்குகிறது என்று தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை சொல்லி இருக்கிறார். வெள்ளம் வந்தபோது கமலாலயத்தின் கதவுகளை பூட்டிக் கொண்டு உள்ளே இருந்தவர்கள் எல்லாம், வெள்ளம் வடிந்த பின்னர் வெளியே வந்து அறிக்கைகளை வெளியிட்டு கொண்டிருக்கிறார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முழங்கால் அளவு தண்ணீரில் நின்றுக் கொண்டு பேட்டி அளித்துவிட்டு சேலத்துக்கு சென்றுவிட்டார். இன்றைக்கு இந்த நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று சொல்கிறார். ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று ஒருவர் சொல்கிறார். ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மற்றொருவர் சொல்கிறார்.

நான் அண்ணாமலையிடம் கேட்டுக்கொள்வது, நீங்கள் ஒன்றிய அரசிடம் பேசி தமிழ்நாடு அரசு கேட்டுள்ள நிதியை பெற்று தர வேண்டும். ஏற்கனவே ஜிஎஸ்டி நிலுவைத்தொகைக்காக தொடர்ச்சியாக போராடி கொண்டிருக்கிறோம்.

2014-15 முதல் 2021-22 வரையில் ஒன்றிய அரசின் நேரடி வரி பகிர்வாக நாம் கொடுத்திருப்பது ரூ.5.16 லட்சம் கோடி. இதே காலக்கட்டத்தில் வரி பகிர்வாக ஒன்றிய அரசிடம் நாம் பெற்றிருப்பது ரூ.2.08 லட்சம் கோடிதான். தற்போது தமிழ்நாடு அரசு கேட்டுள்ள ரூ.5 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசிடம் பெற்று தரும் வேலையை அண்ணாமலை முதலில் செய்ய செய்துவிட்டு, அதற்கு பின்னர் அவருடைய விமர்சனங்களை முன் வகைக்கலாம்.

நாங்கள் எதையும் மூடி மறைக்கவில்லை. எங்களுடைய பணி வெளிப்படையானது. எனவே இதில் வெள்ளை அறிக்கை கேட்பது என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset