செய்திகள் உலகம்
இஸ்ரேல் நகருக்குள் நுழைந்த ஹமாஸ் போராளிகள் - 'யுத்தம்' செய்வதாக இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு
டெல் அவிவ்:
ரஷ்யா - உக்ரைன் போரில் இருந்து கவனத்தை இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் பக்கம் ஒட்டுமொத்தமாக திருப்பிக் கொள்ளலாம் என்பதுபோல், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு ‘நாங்கள் யுத்தம் செய்கிறோம்’ என்று பிரகடனம் செய்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் இன்றைய (சனிக்கிழமை) காலைப் பொழுது சகஜமானதாகத் தொடங்கவில்லை. காலை 8 மணி தொடங்கி 2 மணி நேரத்தில் இஸ்ரேல் முழுவதும் பல பகுதிகளிலும் ஏவுகணைகள் துளைத்தெடுத்தன. சற்றும் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் தேசமும், தேச மக்களும் அதிர்ச்சிக்கு உள்ளான சூழலில் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். மோட்டார் சைக்கிள்கள், கார்கள், பேரா க்ளைடர்கள் எனப் பலவாறாக இஸ்ரேலுக்குள் ஹமாஸ் போராளிகள் நுழைந்துள்ளனர்.
திடீர் தாக்குதல் பின்னணி:
இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையே உள்ளது காசா பகுதி. இது தன்னாட்சி பெற்ற பகுதியாக காசா முனை பகுதி உள்ளது. இந்தப் பகுதி ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது. இவ்வமைப்புத்தான் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது என்பது இஸ்ரேலின் நீண்ட கால குற்றச்சாட்டு. ஹமாஸுக்கு தேவையான நிதி உதவிகளை ஈரான் செய்து வருவதாகவும் இஸ்ரேல் கூறிவருகிறது.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து காசாவைக் கைப்பற்ற முயற்சிக்கிறது என்பது பாலஸ்தீனத்தின் குற்றச்சாட்டு. இஸ்ரேல் கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீனத்தை கையகப்படுத்தி கபளீகரம் செய்துவிட்டது. அந்த மக்கள் சொந்த நாட்டிலே அகதிகள் போல் வாழ்கிறார்கள்.
இஸ்ரேல் அடிக்கடி காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தி பொதுமக்களை கொல்வது தொடர்கதையாக இருக்கிறது.
இஸ்ரேல் தாக்குதல்களை காசாவை நோக்கி நடத்துவதால் காசா குடிமக்கள் எப்போதும் உயிர் பயத்துடன் இருக்கிறார்கள் என்பது நடுநிலை நாடுகளின் கருத்து.
கடந்த 2021-ல் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பெரிய அளவிலான மோதல் மூண்டது. உலக நாடுகளின் தலையீட்டின் பேரில் இந்த மோதல் படிப்படியாக அடங்கியது. இந்நிலையில் இன்று (அக்.7) காலை காசா பகுதியில் இருந்து இஸ்ரேலை தாக்கின ஏவுகணைகள். வெறும் 1, 2 அல்ல ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் என சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.
யுத்தம் செய்கிறோம் - பிரதமர் பிரகடனம்:
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ கூறுகையில், "நாங்கள் யுத்தம் செய்கிறோம். அதில் நாங்களே வெல்வோம். எங்களின் எதிரி யோசித்துப் பார்த்திராத விலையைக் கொடுக்க நேரிடும்" என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஹமாஸ் அமைப்பு ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளது. மேலும், இஸ்ரேல் நாட்டு வீரர்களை பிணையாகப் பிடித்து வைத்துள்ளதாகவும் கூறியது.
காசாவின் வேதனைக் காட்சிகள்:
இஸ்ரேல் எல்லையை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் குடும்பம் குடும்பமாக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். சிலர் கடைகளில் காய்கறி, உணவுப் பொருட்கள், மருந்து என அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இஸ்ரேல் எல்லைப் பகுதியிலிருந்து காசாவாசிகள் தள்ளிச் சென்றுகொண்டிருக்க, இஸ்ரேல் படைகள் தெற்கு நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றன. இஸ்ரேல் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, "தெற்கை நோக்கி இஸ்ரேல் வீரர்கள் விரைந்துள்ளனர். காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் போராளிகள் எங்கெங்கு இருக்கின்றனர் என்பதை அறிந்து முன்னேறுகின்றனர்" என்று கூறியுள்ளார்.
பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி கண்டனம்: இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் நிகழ்த்திய தாக்குதலை வழக்கம்போல் பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் கண்டித்துள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm