நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

நான் இவரைத் திருடிவிட்டேன்..! - வெள்ளிச் சிந்தனை

ஓர் இரவு மாலிக் பின் தீனார் (ரஹ்) அவர்களின் வீட்டுக்குள் திருடன் ஒருவன் நுழைந்து விட்டான்.

இருளில் பதுங்கி, பதுங்கி நுழைந்தவன் வீடு முழுவதையம் சல்லடை போட்டுத் தேடி விட்டான். அவன் எதிர்பார்த்து வந்தது எதுவுமே அவனுக்குக் கிடைக்கவில்லை. 

பழைய கிழிந்த பாய், அரதப் பழசான சொம்பு ஆகியவற்றைத் தவிர வேறு எதுவுமே அந்த வீட்டில் இருக்கவில்லை. மனம் நொந்து போய் அவன் வீட்டிலிருந்து வெளியேற எத்தனித்த போது, மாலிக் பின் தீனார்(ரஹ) அந்தத் திருடனுக்கு சலாம் சென்னார். 

அவருடைய சலாமுக்கு ‘வஅலைக்கும் அஸ்ஸலாம்’ என பதில் கொடுத்தான் திருடன். மாலிக் பின் தீனார்(ரஹ்) அவனைப் பார்த்துச் சொன்னார்: ‘நீ தேடி வந்த உலகம் உனக்கு இங்கே கிடைக்கவில்லை. மறுமைக்கான சாதனங்கள் சிலவற்றை வாங்கிக் கொண்டு போகின்றாயா?’

அந்தக் கணத்தில் அவன் நெஞ்சம் நெகிழ்ந்து போனான். ‘சரி’ என்று ஒப்புக் கொண்டான். 

மாலிக் பின் தீனார்(ரஹ்) சொன்னார் : ‘அந்தச் சொம்பில் தண்ணீர் இருக்கின்றது. போய் ஒளு செய்து விட்டு வா. இரண்டு ரகஅத் தொழுதுவிடு. அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேள்.’

இரண்டு ரகஅத் தொழுததுமே அவனுடைய மனம் இளகிவிட்டது. அங்கேயே தங்கி இரவு முழுக்க வழிபடுவதற்கு அனுமதி கேட்டான். 

அதன் பிறகு அவர்கள் இருவருமே சேர்ந்து இரவு முழுக்க தஹஜ்ஜுத் தொழுதார்கள். 

அதிகாலையில் தொழுகைக்காக மாலிக் பின் தீனார்(ரஹ்) வீட்டை விட்டுக் கிளம்பிய போது அவருடன் அந்த திருடனும் வந்தான். 

மாலிக் பின் தீனாரின் சீடர்கள் ‘யார் இவர்?’ என அவரிடம் வினவினார்கள். மாலிக் சொன்னார்: ‘நேற்று இரவு இவர் திருடுவதற்காக என் வீட்டுக்கு வந்தார். நான் இவரை திருடிவிட்டேன்’. 
(இமாம் ஜுஹ்பி அவர்களும் மற்றவர்களும் இந்த வரலாற்று நிகழ்வை பகிர்ந்திருக்கின்றார்கள்)

சீர்திருத்தப் பணி என்பது உத்தமர்களை ஒன்றுதிரட்டுவது அல்ல. அதற்கு மாறாக பாவிகளை பாவமன்னிப்பின் வாயிலுக்கு இட்டுச் செல்கின்ற பாதையைக் காட்டி அவர்களையும் நம்மவர்களாய் ஆக்கிக் கொள்வதற்குப் பெயர்தான் சீர்திருத்தம். 

உங்களின் சுயசீர்திருத்தம் பற்றிய கவலை உங்களைத் தொற்றிக் கொண்டிருக்கின்றதா? அறிந்து கொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் முதலாவதாக பாவமன்னிப்பு என்கிற சுனையின் பரிசுத்தமான தண்ணீரில் நீங்கள் குளிக்க வேண்டியிருக்கும். 

அதன் பிறகு இறுதி மூச்சு வரை தவ்பா என்கிற பாவமன்னிப்பின் தூய்மையான இயல்பிலும் நிலையிலும் நிலைத்திருக்க வேண்டியிருக்கும். தவ்பா எந்த அளவுக்கு உண்மையானதாய், அப்பழுக்கற்றதாய் இருக்கின்றதோ சீர்திருத்தமும் அந்த அளவுக்கு ஆழமானதாய், அனைத்தையும் தழுவியதாய் இருக்கும்.

மற்ற மனிதர்களின் சீர்திருத்தம் என்கிற புரட்சிகர இலட்சியத்தை ஏந்திக் கொண்டு நீங்கள் களம் இறங்கியிருக்கின்றீர்கள் எனில், மற்ற அனைத்தையும் விட தவ்பா - பாவமன்னிப்பு பற்றிய சரியான கண்ணோட்டத்தை, அதன் மீதான சரியான, உள்ளார்ந்த ஈடுபாட்டைத்தான் முதலில் தோற்றுவிக்க வேண்டியிருக்கும். 

உலகத்தின் எந்தவொரு சீர்திருத்த இயக்கமும் தவ்பா பற்றிய சரியான, மனநிறைவு அளிக்கக்கூடிய, நம்பிக்கையூட்டக்கூடிய கண்ணோட்டம் இல்லாமல் வெற்றி அடையவே முடியாது.

டாக்டர் முஹிய்யுத்தீன் காஜி

தொடர்புடைய செய்திகள்

+ - reset