நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஈரோடு இடைத் தேர்தல்: வாக்காளர்களின் வீடுகளில் குறியீடு இடப்பட்டு பணம், பொருள் விநியோகம்

ஈரோடு: 

ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் பரவலாக வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதற்கிடையே, ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை வாக்குகள் இருக்கின்றன என்ற எண்ணிக்கை குறித்து, வீடுகளின் முகப்பு சுவரில், குறியீடு இடப்பட்டிருப்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஈரோடு கிழக்கில் வாக்காளர்களை கொட்டகையில் அடைத்து வைத்து பணம் விநியோகம் செய்வது, சுற்றுலா அழைத்துச் செல்வது, தலைவர்களின் பிரச்சாரத்தில் பங்கேற்கச் செய்து, அதற்கு பணம் வழங்குவது, அசைவ விருந்து வழங்குவது என பல முறைகேடுகள் நடப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், பரிசுப் பொருள், பணம்வழங்கும் நடவடிக்கையில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குக்கர் விநியோகம்: இதற்கிடையே, வெட்டுக்காட்டு வலசு பகுதியில், நேற்று முன்தினம் வீடு வீடாக குக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. குக்கர் பெற்றுக் கொண்ட பெண்களிடம், கை சின்னத்துக்கு வாக்களிக்ககோரும் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில், எவர்சில்வர் குடங்கள், வேட்டி, சேலையும் வழங்கப்பட்டுள்ளன.

ஈரோடு சிந்தன் நகர் பகுதியில், அதிமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று, பெண்களுக்கு வெள்ளிக் கொலுசு, ஆண்களுக்கு தலா ரூ.500 வழங்கியுள்ளனர்.

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் சார்பிலும் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள் விநியோகம் செய்யும் வீடியோ பதிவுகளும் வைரலாகி வருகின்றன.

இரவில் மின்சாரம் துண்டிப்பு
இந்த நிலையில், தொகுதியில் பல்வேறு பகுதிகளிலும், ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை வாக்குகள் இருக்கின்றன என்ற எண்ணிக்கை குறித்து, வீடுகளின் முகப்பு சுவரில், குறியீடு இடப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில், இரவு நேரங்களில் மின் இணைப்பை துண்டித்துவிட்டு, ஒரு வாக்குக்கு இவ்வளவு என கணக்கிட்டு, பணம் வழங்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் புகார் கொடுத்த அதிமுக சட்டப் பிரிவுநிர்வாகி இன்பதுரை கூறியபோது, ‘‘வாக்காளர்களை சுதந்திரமாக இருக்க விடாமல், அவர்களது வறுமையை பயன்படுத்தி, விலை பேசுவதும், அடைத்து வைப்பதுமாக திமுகவினர்அராஜகம் செய்கின்றனர். 

இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளோம். பறக்கும் படையும் இதை கண்காணிப்பது இல்லை. தேர்தல் பார்வையாளர்களும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்’’ என்றார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்தும், வீடுகளில் எத்தனை வாக்கு இருக்கிறது என சுவரில் குறியிடப்பட்டிருப்பது குறித்தும் தேர்தல் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமார் கூறியபோது, ‘‘வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் விநியோகம் தொடர்பான புகாரையடுத்து, 4 பறக்கும் படைகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தின. 

வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள் விநியோகம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக புகார் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

- செய்திப்பிரிவு

தொடர்புடைய செய்திகள்

+ - reset