நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாறை இடிந்து விழுந்து இந்திய ஆடவர் மரணம்; குவாரி செயல் பாட்டை தற்காலிகமாக மூட உத்தரவு: டத்தோ சிவநேசன்

ஈப்போ:

சிம்பாங் பூலாய் பகுதியில் உள்ள ஒரு குவாரியில் பாறை சரிந்து லோரி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த குவாரியின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்த தொழிலாளர் பாதுகாப்பு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

பேரா மாநில மனிதவளம், சுகாதாரம், இந்தியர் விவகாரங்கள், தேசிய ஒருங்கிணைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் இன்று சம்பவ இடத்தை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

அவருடன் பேரா ஜேகேகேபி இயக்குனர் மொஹட் ஹஸ்லிம் உசேன் உடனிருந்தார்.

கடந்த திங்கட்கிழமை மாலை சுமார் 4.40 மணியளவில் இந்த விபத்து நடந்தது. பலியானவர் 53 வயதுடைய எம். சிவக்குமார் ஆவார்.

குவாரி பகுதிக்குள் நுழைய காத்திருந்த போது, மலைப் பகுதியில் இருந்து பெரிய பாறை ஒன்று திடீரென சரிந்து அவர் ஓட்டிய லோரியின் தலைப்பகுதியில் விழுந்தது.

லோரி கேபினில் சிக்கிய அவர் பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஜேகேகேபி தடை உத்தரவு வழங்கி, மேல் விசாரணைக்காக குவாரியின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டுள்ளது.

பொறியாளர்களின் தொழில்நுட்ப அறிக்கை கிடைத்த பிறகு அடுத்த முடிவு எடுக்கப்படும் என்று சிவநேசன் கூறினார்.

முதல கட்ட விசாரணையில் சம்பவம் திடீரென நடந்துள்ளது, பாறை நகர்வதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

அன்றைய தினம் காலையில் குவாரியில் வெடி வைத்து தகர்க்கும் பணி நடந்துள்ளது, ஆனால் அதற்கும் இந்த விபத்திற்கும் நேரடி தொடர்பு உள்ளதா என்பதற்கு ஆதாரம் இல்லை.

இந்த குவாரி நிறுவனம் 1989 முதல் சட்டப்பூர்வமாக இயங்கி வருகிறது. இதற்கு முன் எந்த விபத்து பதிவும் இல்லை.

இந்த விசாரணை தொழிலாளர் பாதுகாப்பு, சுகாதார சட்டம் 1994 (சட்டம் 514) பிரிவு 17 மற்றும் 18-ன் கீழ் நடத்தப்படுகிறது. மீறல் இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

போலிஸ் விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset