நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வீட்டுக் காவலில் இருப்பதற்காக நஜிப் செலுத்த வேண்டிய 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்திற்கு உதவ அம்னோ நிதி திரட்டும்: ஜாஹித்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், தனது தண்டனையின் மீதமுள்ள காலத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்கான நிபந்தனையாக விதிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்துவதற்கு உதவ, அம்னோ தன்னார்வ நன்கொடையை திரட்ட உள்ளது.

இந்த நன்கொடை நிதி, அம்னோ தலைமை, உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், நஜிப்பிற்கு ஆதரவளிக்க விரும்பும் பொதுமக்களுக்கும் திறந்திருக்கும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறினார்.

இது வெளிப்படையாகவும், ஒழுங்காகவும், பொருந்தக்கூடிய அனைத்து விதிமுறைகள், சட்டங்களுக்கு இணங்கவும் செயல்படுத்தப்படும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

முன்னதாக, கூட்டரசுப் பிரதேசங்களின் மன்னிப்பு வாரியம் 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தும் நிபந்தனையின் பேரில், நஜிப் தனது சிறைத் தண்டனையின் மீதமுள்ள காலத்தை ஆகஸ்ட் 23, 2028 வரை வீட்டுக் காவலில் கழிக்க நிபந்தனைக்குட்பட்ட மன்னிப்பின் மூலம் அனுமதித்தது.

நஜிப் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறினால், நிபந்தனை மன்னிப்பு ரத்து செய்யப்படலாம்.

அதன் காரணமாக அவர் தனது மீதமுள்ள தண்டனைக் காலத்தை சிறையில் கழிக்கத் திரும்ப வேண்டியிருக்கும் என்றும் பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

42 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிதி மோசடி வழக்கில், கூட்டாட்சி நீதிமன்றம் நஜிப்பின் தண்டனையை உறுதி செய்ததைத் தொடர்ந்து, அவர் ஆகஸ்ட் 2022-ல் தனது சிறைத் தண்டனையை அனுபவிக்கத் தொடங்கினார்.

இதற்கிடையில், நஜிப் தனது மீதமுள்ள தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதித்த முடிவை அம்னோ நன்றியுடன் வரவேற்பதாக டத்தோஸ்ரீ ஜாஹித் கூறினார்.

மாமன்னரின் அமைப்பு, அரசியலமைப்பின் மேன்மை, சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை மதித்து, நியமிக்கப்பட்ட வழிமுறைகள் மூலம் இந்த விண்ணப்பத்தைக் கொண்டு வருவதே ஆரம்பம் முதலே அம்னோவின் நிலைப்பாடாக இருந்தது.

அனைத்து அம்னோ உறுப்பினர்களும் இந்த முன்னேற்றத்தை நன்றியுடன் வரவேற்கவும், தங்களின் ஒவ்வொரு பேச்சிலும் கண்ணியத்தைக் கடைப்பிடிக்கவும், நிறுவப்பட்ட அனைத்து செயல்முறைகளையும் மதிக்கவும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset