நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசியல் அல்ல, நேர நெருக்கடியே காரணம்: பிரதமரின் தமிழக பயணம் ரத்தானது குறித்து டத்தோஸ்ரீ ரமணன் முற்றுப்புள்ளி

புதுடில்லி:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் இந்தியப் பயணத்தின் போது திட்டமிடப்பட்டிருந்த தமிழ்நாடு விஜயம் ரத்து செய்யப்பட்டது முற்றிலும் நேர நெருக்கடியால் மட்டுமே தவிர, அதில் எந்தவொரு அரசியல் பின்னணியும் இல்லை.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரத்தில் தவறான வதந்திகளையும் போலிச் செய்திகளையும் பரப்புவதை பொறுப்பற்ற தரப்பினர் உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், "அரசியலை விட நாட்டின் நலனுக்கே எப்போதும் முதலிடம் அளிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இங்கு நடைபெறும் 18ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இடையே மலேசிய ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் ரமணன், பிரதமர் அன்வாரின் பயணத் திட்டம் வழக்கத்தை விட மிக அடர்த்தியாக அமைந்திருந்ததாகக் கூறினார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் மற்றும் எத்தியோப்பியப் பிரதமருடனான உயர்மட்ட இருதரப்புச் சந்திப்புகளும், பன்னாட்டுத் தொழில் அதிபர்களுடனான பேச்சுவார்த்தைகளும் இதில் அடங்கும். இச்சந்திப்புகள் மூலம் முதலீடு, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகளில் மலேசியாவிற்குப் புதிய பொருளாதார வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

அதேவேளையில், தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் செப்டம்பர் 10 அன்று லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இரு அலுவலகங்களாலும் சந்திப்பிற்கான நேரங்களைச் சரியாக ஒருங்கிணைக்க முடியாமல் போனதாக அவர் விளக்கமளித்தார்.

புதிய பயணத்திட்டத்தின்படி, புதுடில்லி நிகழ்வுகளை முடித்துக் கொள்ளும் பிரதமர் அன்வார் செப்டம்பர் 13 அன்று கேரளாவுக்கும், செப்டம்பர் 15 அன்று மாலைத்தீவுக்கும் பயணம் மேற்கொண்டு, மலேசிய தினத்திற்கு முன்பாக தாயகம் திரும்புவார்.

மேலும், ஈரானிய மற்றும் எத்தியோப்பியப் பிரதமர்கள் விரைவில் மலேசியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், அப்போது இங்கு தொடங்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சி தொடரும் என்றும் அமைச்சர் ரமணன் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset