நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

வெஸ்ட் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், தமிழகத்தில் தனது வளாகத்தை சென்னையில் திறக்கிறது: முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்

சென்னை: 

ஆஸ்திரேலியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், இந்தியாவில் தனது வளாகத்தை சென்னையில் நிறுவ உள்ளது. இது தமிழ்நாட்டில் அமையவுள்ள முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகமாகும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு முதல்வர் விஜய் முன்னிலையில், உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தி திட்டம் மற்றும் தமிழ்நாட்டின் முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகத்தை நிறுவுவதற்காக முன்னணி உலகளாவிய நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

சென்னை நந்தனத்தில் உள்ள வழிகாட்டி நிறுவனத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சப் (Chubb) நிறுவனம், தனது உலகளாவிய திறன் மையம் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த நார்டெக்ஸ் (Nordex) நிறுவனம், தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவற்றை தமிழ்நாட்டில் முதன்முறையாக நிறுவ முன்வந்துள்ளன. சப் நிறுவனம் அமைக்கவுள்ள மையத்தின் மூலம் 220 பேருக்கும், நார்டெக்ஸ் நிறுவனம் அமைக்கவுள்ள மையத்தின் மூலம் 1,000 பேருக்கும் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு நிறுவனங்களின் முதலீடுகள் மூலம் மொத்தம் 1,220 உயர்தர ஊதியம் வழங்கும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.

இந்த முதலீடுகள், உயர்மதிப்புடைய உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான முக்கிய சர்வதேச மையமாக சென்னை நகரின் நிலையை மேலும் வலுப்படுத்தும். புத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில் வளர்ச்சியை ஊக்குவித்தல், அறிவுசார் திறன் சார்ந்த முதலீடுகளை ஈர்த்தல், திறன்மிக்க மனிதவளத்திற்கு உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்றாற்போல், இம்முதலீடுகள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முதலீடுகள், தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதோடு, உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உயர்கல்வி மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளுக்கான உலகளாவிய மையமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றும் என்று முதல்வர் விஜய் தெரிவித்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset