நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

சிலாங்கூர் பொருளாதாரத்தில் வரலாற்றுச் சாதனை: 460.1 பில்லியனை எட்டி நாட்டின் வளர்ச்சிக்கு புதிய மைல்கல்

ஷா ஆலம்:

2025ஆம் ஆண்டில் சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதார மதிப்பு 460.1 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்து, 28 பில்லியன் ரிங்கிட் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது மலேசியாவின் அனைத்து மாநிலங்களிலும் பதிவான மிக உயர்ந்த பொருளாதார வளர்ச்சியாகும் என்று மலேசிய புள்ளியியல் துறை (DOSM) வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, இந்த வளர்ச்சி, மலேசியா புத்ரா பல்கலைக்கழகம் (UPM), சிலாங்கூர் ஆராய்ச்சி நிறுவனம் (Selangor Research Institute) இணைந்து கணித்திருந்த 455.3 பில்லியன் ரிங்கிட் என்ற பொருளாதார மதிப்பீட்டையும் விஞ்சியுள்ளதாக தெரிவித்தார்.

இந்த அபார வளர்ச்சியின் மூலம், மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சிலாங்கூரின் பங்களிப்பு 26.2 சதவீதத்திலிருந்து 26.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், சிலாங்கூரின் பொருளாதார அளவு கோலாலம்பூரை விட 1.7 மடங்கும், ஜொகூரை விட 2.7 மடங்கும் அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2025ஆம் ஆண்டில் சிலாங்கூர் 6.3 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது, 5.2 சதவீதம் என்ற தேசிய பொருளாதார வளர்ச்சி விகிதத்தை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாகும்.

அவரின் விளக்கத்தின்படி, இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக சேவைத் துறை (15.9 பில்லியன் ரிங்கிட்), உற்பத்தித் துறை (5.3 பில்லியன் ரிங்கிட்), கட்டுமானத் துறை (3.7 பில்லியன் ரிங்கிட்) ஆகிய மூன்று முக்கிய துறைகளின் வலுவான விரிவாக்கம் அமைந்துள்ளது.

அத்துடன், நாட்டின் கட்டுமான நடவடிக்கைகளில் 35.9 சதவீதம், உற்பத்தித் துறையில் 32.8 சதவீதம், சேவைத் துறையில் 27.1 சதவீதம் என்ற அளவில் சிலாங்கூர் தொடர்ந்து முன்னணி பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், 2021 முதல் 2025 வரை அமல்படுத்தப்பட்ட முதல் சிலாங்கூர் திட்டம் (RS-1) என்ற ஐந்தாண்டு சமூக-பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் மாநிலத்தின் பொருளாதார கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட்டதே இந்த வரலாற்றுச் சாதனைக்கு அடித்தளமாக அமைந்ததாக அமிருடின் ஷாரி கூறினார்.

RS-1 திட்ட காலத்தில், சிலாங்கூரின் பொருளாதாரம் 343.5 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து 460.1 பில்லியன் ரிங்கிட்டாக, அதாவது 33.94 சதவீதம் அல்லது 116.6 பில்லியன் ரிங்கிட் உயர்ந்துள்ளது.

இந்த வெற்றி அரசின் கொள்கைகளால் மட்டுமல்ல, PLATS திட்டத்தில் இணைந்து தொழில் தொடங்கிய சிறு வணிகர்கள், JobCare திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற்றவர்கள், IC Design Park-இல் பணியாற்றும் பொறியாளர்கள், மின், மின்னணு உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள தொழில்நுட்ப நிபுணர்கள், மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு பங்களித்த நிறுவனங்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த முயற்சியாலும் சாத்தியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset