நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

700 இந்திய தொழில்முனைவோரை வலுப்படுத்தும் மித்ராவின் உயர்வு மடானி மானியத் திட்டம் அறிமுகம்: ரவீந்திரன் நாயர்

கோலாலம்பூர்:

இந்தியச் சமூகத்தின் பொருளாதாரப் பயணத்தில் ஒரு புதிய நம்பிக்கையின் கீழ் மித்ரா நாடு தழுவிய அளவில் 700 தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில், உயர்வு மடானி எனும் மானியத் திட்டத்தை இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான மடானி அரசாங்கம், இந்தியத் தொழில்முனைவோரின் உழைப்பை மதிக்கும் விதமாக முன்னெடுத்துள்ள இந்தத் திட்டம், வெறும் நிதி உதவி மட்டுமல்ல.

அது சமூகத்தின் பொருளாதார வலிமைக்கான ஒரு வலுவான அடித்தளம்.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டம் குறித்துப் பேசுகையில், இந்தியத் தொழில்முனைவோரின் வாழ்வில் ஒளியேற்றுவதே மடானி அரசாங்கத்தின் இலக்கு என்று உணர்வுப்பூர்வமாகத் தெரிவித்தார்.

இந்த மானியம் ஒரு தற்காலிக உதவி அல்ல; இது நம் தொழில்முனைவோரை வேலை தேடுபவர்களாக இருந்து, சமூகத்திற்கு வேலை வழங்கும் தொழில் அதிபர்களாக உயர்த்தும் ஒரு நீண்டகால முதலீடு  என்று அவர் ஆழமாக வலியுறுத்தினார்.

இந்தத் திட்டத்தின் சிறப்பம்சத்தை விளக்கிய மித்ராவின் தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயர்,

தொழில்முனைவோரின் வணிகத் தேவைக்கேற்ப நிதியுதவி மூன்று பிரிவுகளாகத் தரம் பிரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

குறு சிறு வணிகங்களுக்கு 20,000 வெள்ளி வரையிலும், வளர்ச்சிப் பாதையில் உள்ள வணிகங்களுக்கு 35,000 வெள்ளி வரையிலும், வணிகத்தை விரிவுபடுத்தத் துடிக்கும் தொழில்முனைவோருக்கு 50,000 வெள்ளி வரையிலும் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு தொழில்முனைவோரும் தங்களின் வணிகத்தை அடுத்த பரிமாணத்திற்கு எடுத்துச் செல்ல இந்தத் திட்டம் ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும்.

இன்று ஜூன் 29 முதல் விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை 13-ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் தகுதியுடைய விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 21 முதல் 55 வயதுக்குட்பட்ட, முறையான எஸ்.எஸ்.எம் பதிவு கொண்ட மலேசிய இந்தியர்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்கள் வணிகக் கனவுகளை நனவாக்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கூடுதல் தகவல்களுக்கும், சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் மித்ராவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது 03-8892 3438, 03-8886 6197, 03-8886 6013, 03-8871 1127, மற்றும் 03-8886 6221 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset