நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆலய கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன்

கேமரன்மலை:

ஆலய கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம் என்று பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் வலியுறுத்தினார்.

ஆலயங்களுக்கு தெளிவான வழிகாட்டி உருவாக்கும் நோக்கில் பேரா மாநிலத்தில் இருநாள் கருத்தரங்கு சிறப்புடன் நடைபெற்றது.

இந்து ஆலயங்களில் நடைபெறும் கும்பாபிஷேக விழாக்களின் நடைமுறை, செலவினங்கள், தேவையான ஆகம விதிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கும் ஆலய நிர்வாகங்களுக்கும் தெளிவான விளக்கத்தை வழங்கும் நோக்கில் பேராக் மாநிலத்தின் முன்னெடுப்பில் இருநாள் கருத்தரங்கு கேமரன் மலையில் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் மலேசிய இந்து சங்கத்தின் பேரா மாநிலத் தலைவர் பொன். சந்திரன், பேரா அர்ச்சகர்கள் சங்கத் தலைவர் சிவஸ்ரீ டினேஷ் குமார் குருக்கள், கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய இந்து தேவஸ்தான பரிபாலன சபை பிரதிநிதி கோபி, தமிழர் வம்சாவளி இயக்கத்தின் சுந்தரராஜு உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இரண்டாம் நாள் அமர்வில் இந்து தர்ம மாமன்றத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

இந்த கருத்தரங்கை நிறைவு செய்து கருத்தரங்கில் உரையாற்றியவர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும், இந்திய விவகாரங்களுக்கான தலைவருமான இந்த கருத்தரங்கில் இந்து ஆலயங்களில் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது கட்டாயமான சமய நடைமுறையாக இருந்தாலும், அதற்கான செலவினங்களில் பெரும் வேறுபாடுகள் காணப்படுவது ஆலய நிர்வாகங்களுக்கும் பக்தர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டினார்.

ஆலயங்கள் கும்பாபிஷேகத்திற்காக அரசின் நிதியுதவியை நாடி வருவதாகவும், தற்போதைய அரசு ஆலயங்களின் தேவையை உணர்ந்து கணிசமான நிதியுதவிகளை தொடர்ந்து வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

பேரா மாநில அரசும் ஆலயங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.

எனினும், சில ஆலயங்கள் சமர்ப்பிக்கும் கும்பாபிஷேக செலவின மதிப்பீடுகள் மிக அதிகமாக இருப்பது கவலைக்குரியதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். 

ஒரு ஆலயம் கும்பாபிஷேகத்திற்காக சுமார் 85,000 ரிங்கிட் செலவாகும் என மதிப்பீடு வழங்கிய நிலையில், அதே பணிக்காக அர்ச்சகர்கள் சங்கம் அளித்த மதிப்பீட்டில் கணிசமான வித்தியாசம் இருந்ததாக அவர் எடுத்துக்காட்டினார்.

அதேபோல், கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வேண்டிய அர்ச்சகர்களின் எண்ணிக்கையிலும் ஒரே மாதிரியான நடைமுறை இல்லாத நிலை காணப்படுவதாக அவர் கூறினார்.

சில ஆலயங்களில் ஐந்து அர்ச்சகர்களுடன் விழா நடைபெறுவதும், சில இடங்களில் பதினைந்து முதல் இருபத்தைந்து அர்ச்சகர்கள் வரை பங்கேற்பதும் செலவினங்களை அதிகரிக்கும் காரணங்களில் ஒன்றாக இருப்பதாக அவர் விளக்கினார்.

இதனால், கும்பாபிஷேகம் என்றால் என்ன, அது ஏன் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும், ஆகம ரீதியாக என்னென்ன நடைமுறைகள் அவசியம், செலவினங்கள் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும் போன்ற அம்சங்கள் குறித்து பொதுமக்களுக்கும் ஆலய நிர்வாகங்களுக்கும் தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

இந்த நோக்கத்துடனேயே பேரா மாநிலம் முதன் முறையாக ஜூன் 28, 29 ஆகிய இரு தினங்களில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளதாகவும், இது எதிர்காலத்தில் ஆலய நிர்வாகங்களில் வெளிப்படைத்தன்மையையும், கும்பாபிஷேக செலவினங்களில் நியாயமான நடைமுறையையும் உருவாக்குவதற்கு முக்கியமான தொடக்கமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset