நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவின் முன்னேற்றம் வெறும் தொழில்நுட்பத்தால் மட்டும் அல்ல, நமக்கு அறிவும் மனிதாபிமானமும் அவசியம்: பிரதமர் அன்வார் வலியுறுத்தல்

கோலாலம்பூர்: 

மலேசியா ஒரு முன்னேற்றமடைந்த, நாகரிகமான நாடாக உயர்வதற்கு தொழில்நுட்ப வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு (AI), செமிகாண்டக்டர் முதலீடுகள் மட்டும் போதாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் உறுதியாக தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர் சர்வதேச புத்தகத் திருவிழா 2026 (PBAKL 2026) நிகழ்வில் உரையாற்றிய அவர், ஒரு நாட்டின் உண்மையான வலிமை “அறிவுக் கலாச்சாரம், மனிதாபிமான மதிப்புகள், வாசிப்புப் பழக்கம்” என்பதில்தான் அடங்கியுள்ளது என வலியுறுத்தினார்.

அவர் கூறியதாவது, “நாம் வெறும் ஒரு துறையில் மட்டும் திறமையான மனிதர்களை உருவாக்க விரும்பவில்லை; மனிதன் முதலில் மனிதனாக உயர வேண்டும். மனிதாபிமானம் இல்லாத தொழில்நுட்பம் முழுமையான வளர்ச்சியை தராது” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அன்வர் மேலும் தெரிவித்ததாவது, மலேசிய அரசு டிஜிட்டல் மாற்றம், எரிசக்தி மாற்றம், செமிகாண்டக்டர் துறைகளில் தீவிரமாக முதலீடு செய்து வருகிறது. இத்துறைகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் முக்கிய பங்காற்றுகின்றன.

ஆனால், அவர் எச்சரித்ததாவது, பொருளாதார முன்னேற்றத்துடன் சேர்ந்து அறிவுக் கலாச்சாரம் வளரவில்லை என்றால், சமூகத்தின் நாகரிக அடித்தளம் பலவீனமடையும் அபாயம் உள்ளது.

சமூக ஊடகங்களில் தகவல் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், அனைத்தும் அறிவை வளர்க்காது என்பதால், வாசிப்பு, கல்வி கலாச்சாரத்தை வலுப்படுத்துவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதன் ஒரு பகுதியாக, அரசாங்கம் தொடர்ந்து கல்வி, அறிவு வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து, மாணவர்கள் மற்றும் உயர்கல்வி மாணவர்களுக்கு 100 ரிங்கிட் மதிப்புள்ள மடானி புத்தக உதவித் திட்டத்தை தொடர்வதாகவும் அவர் அறிவித்தார்.

மொத்தத்தில், “உயர்ந்த தொழில்நுட்பத்துடன் மனித மதிப்புகளும் இணைந்தால்தான் ஒரு நாடு உண்மையான நாகரிக உயர்வை அடையும்” என்ற செய்தியை பிரதமர் வலியுறுத்தினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset