நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 4,000 க்கும் மேற்பட்ட ஆவணமற்ற குடியேறிகளை கடல்சார் அமலாக்கத் துறை தடுத்து வைத்துள்ளது

சண்டாக்கான்:

இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், நாடு முழுவதும் உள்ள 4,107 சட்டவிரோத குடியேறிகளையும், 316 கடத்தல்காரர்களையும் மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (எம்.எம்.ஈ.ஏ) தடுத்து வைத்துள்ளது.

எம்.எம்.ஈ.ஏ-வின் நடவடிக்கைகள் துணைத் தலைமை இயக்குநர் வைஸ் அட்மிரல் முஹம்மத் ஜாவாவி அப்துல்லாஹ், குடியேறி கடத்தல் கும்பல்கள் தொடர்ந்து சுறுசுறுப்பாக இருப்பதாகவும், இப்பகுதியில் மலேசியாவின் மூலோபாய நிலைப்பாடு காரணமாக, நாட்டின் கடல் நீரைப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

"ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான புள்ளிவிவரங்கள், தடுத்து வைக்கப்பட்ட சட்டவிரோத குடியேறிகளில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காட்டுகின்றன. அவை, மியான்மர் (1,932), இந்தோனேசியா (1,727), பிலிப்பைன்ஸ் (180) ஆகும். இது, அச்சுறுத்தல் தொடர்ந்து தீவிரமாக இருப்பதை நிரூபிக்கிறது.

"இந்தச் சூழ்நிலை, தேசிய கடல் நீர் முழுவதும் அதிகாரிகளின் ஆக்ரோஷமான, தொடர்ச்சியான அமலாக்க நடவடிக்கையைக் கோருகிறது" என்று இன்று இங்கு நடைபெற்ற நடவடிக்கை ரெட்பேக் 22/2026 (ஓப் ரெட்பேக்) நிறைவு விழாவிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

குடியேறி கடத்தல் வழக்குகள் தொடர்பாக, 19 கடத்தல்காரர்கள், 233 சட்டவிரோத குடியேறிகளை உள்ளடக்கிய எட்டு விசாரணைக் கோப்புகளை எம்.எம்.ஈ.ஏ திறந்துள்ளதாக முஹம்மத் ஜாவாவி தெரிவித்தார்.

"மொத்தத்தில், தடுத்து வைக்கப்பட்ட கடத்தல்காரர்களில் பெரும்பாலானோர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் (13). அதைத் தொடர்ந்து, மியான்மர் (மூன்று), தாய்லாந்து (இரண்டு), ஒரு உள்ளூர்வாசி ஆவர்" என்றார் அவர்.

இதற்கிடையில், மே 18 முதல் சண்டாக்கான் கடல் நீரில், ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படையுடன் (ABF) இணைந்து ஓப் ரெட்பேக் நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த நடவடிக்கை, 2014 ஆம் ஆண்டு முதல் மலேசியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான நடைபெற்று வரும் கடல் அமலாக்க ஒத்துழைப்பைப் பிரதிபலிப்பதாகவும் அவர் கூறினார்.

"MMEA, ABF-ஆல் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, குடியேறி கடத்தல், கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களைக் கடத்தல், கடலில் தேடுதல், மீட்பு முயற்சிகள், சட்டவிரோத, பதிவு செய்யப்படாத, ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடித்தல் போன்ற எல்லை தாண்டிய குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் கவனம் செலுத்துகிறது" என்றார் அவர்.

இந்த ஆண்டு செய்யப்பட்ட 4,107 கைதுகள், ABF உட்பட மூலோபாய ஒத்துழைப்பின் செயல்திறனைத் தெளிவாக நிரூபிப்பதாகவும், அமலாக்க முயற்சிகள்  ஒருங்கிணைந்த முறையில் தொடர வேண்டும் என்றும் முஹம்மத் ஜாவாவி கூறினார்.

நாட்டின் கடல் நீரின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக, கடலில் நடைபெறும் எந்தவொரு குற்றச் செயலுக்கும் சமரசம் செய்ய முடியாது என்றார் அவர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset