நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசான் அறிவென்னும் விளக்கை ஏற்றும் உன்னத சக்தி: டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் ஆசிரியர் தின வாழ்த்து

கோலாலம்பூர்:

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான், இது வெறும் பழமொழி அல்ல, நிதர்சனமான உண்மை. ஒரு குழந்தையை மனிதனாக மாற்றி, அந்த மனிதனை ஒரு மாபெரும் ஆளுமையாகச் செதுக்கும் உன்னதக் கலைஞன்தான் 'ஆசிரியர்' என்று ஆசிரியர் தின செய்தியில் மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ஆசிரியர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆசிரியப் பணி என்பது வெறும் பிழைப்பு அல்ல; அது ஒரு மகத்தான அறப்பணி. ஒரு மெழுகுவர்த்தியைப் போலத் தன்னைத் தானே உருக்கிக் கொண்டு, மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஒளியூட்டுபவர்கள் ஆசிரியர்கள் திகழ்கின்றனர்.

ஆசிரியர்கள் வெறும் பாடங்களை நடத்துவதில்லை; வாழ்க்கையை எப்படிக் கையாள வேண்டும் என்ற கலையைக் கற்றுத் தருகிறார்கள்.

ஒரு சிற்பி கல்லுக்குள் இருக்கும் சிலையைக் காண்பது போல, ஒரு ஆசிரியர் ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் இருக்கும் திறமையைக் காண்கிறார்.

தோல்வியடையும் போது தோள் கொடுப்பதும், வெற்றியை நோக்கித் தள்ளுவதும் ஆசிரியரின் கரங்களே. நாம் ஏறிச் செல்லும் ஏணியாகத்தான் நின்ற இடத்திலேயே இருந்து, நம்மை உயரங்களுக்குக் கொண்டு செல்பவர்கள் ஆசிரியர்கள் என்றார் டா ன்ஸ்ரீ விக்னேஸ்வரன்.

இன்று இந்த உலகை ஆளும் தலைவர்கள் முதல் விண்வெளிக்குச் செல்லும் விஞ்ஞானிகள் வரை, ஒவ்வொருவரின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு ஆசிரியரின் ஊக்கமும் உழைப்பும் ஒளிந்திருக்கிறது.

காலங்கள் மாறலாம், ஆனால் ஓர் ஆசிரியர் நம் மனதில் விதைத்த அறிவு விதை என்றும் அழியாது.

நமது வாழ்வின் இருளைப் போக்கி, அறிவென்னும் ஒளியேற்றிய அனைத்து ஆசான்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வேளையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தமது மனமார்ந்த
ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset