நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

புதிய ஃபிஃபா ஆசியான் கிண்ணம்: மலேசியாவுக்கு பொற்கால வாய்ப்பு உள்ளது என பவுலோ ஜோசுவே நம்பிக்கை

கோலாலம்பூர்: 

புதிதாக அறிமுகமாகியுள்ள ஃபிஃபா ஆசியான் கிண்ணத் தொடர், நீண்ட காலமாக கோப்பைக்காக ஏங்கிக் காத்திருக்கும் மலேசிய ரசிகர்களின் கனவை நனவாக்கும் மிகப் பெரிய பொன்னான வாய்ப்பாக அமையும் என்று கேஸ் சிட்டி அணியின் நட்சத்திர முன்னணி வீரர் பவுலோ ஜோசுவே உறுதியாக தெரிவித்துள்ளார்.

வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள இந்த பிரம்மாண்ட தொடரில், AFF உறுப்புநாடுகளைச் சேர்ந்த 11 அணிகளுடன், சீனா, இந்தியா, ஹாங்காங் ஆகிய அணிகளும் கலந்து கொள்ளவுள்ளன.

மொத்தம் 14 அணிகள், ஃபிஃபா தரவரிசையின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மோதவுள்ளமை, போட்டியின் விறுவிறுப்பை மேலும் உச்சத்துக்கு கொண்டு செல்ல இருக்கின்றது..

இந்த தொடருக்கான மொத்த பரிசுத்தொகை சுமார் 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், முதல் பிரிவு சாம்பியனுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலரும், இரண்டாம் பிரிவு வெற்றியாளருக்கு 300,000 அமெரிக்க டாலரும் வழங்கப்படவுள்ளது. இதனால், இந்த தொடர் தென்கிழக்காசிய கால்பந்தின் புதிய சகாப்தமாக பார்க்கப்படுகிறது.

மலேசியா கடைசியாக 2024 மெர்டேக்கா தொடரில் வெற்றிக்கிண்ணம் கைப்பற்றியது. அதற்கு முன்பு, 2011 AFF கிண்ணமே தேசிய அணியின் ஆகக் கடைசி பெரிய சாதனையாக இருந்தது.

இதனால், இந்த புதிய ஃபிஃபா ஆசியான் கிண்ணம், மலேசியாவுக்கு மீண்டும் மகுடம் சூடும் வரலாற்றுப் பயணமாக அமையலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தீவிரமாக எழுந்துள்ளது.

மலேசிய அணிக்காக 32 போட்டிகளில் 11 கோல்கள் அடித்துள்ள 37 வயதான ஜோசுவே, “இது ஒரு அற்புதமான தொடர். கோப்பையை வெல்ல மலேசியாவுக்கு கிடைத்திருக்கும் மிகச் சிறந்த சந்தர்ப்பம் இதுதான். தென்கிழக்காசிய அணிகளுக்கு எதிராக நாங்கள் திறமையாக விளையாட முடியும் என்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளோம்.

சில தருணங்களில் தடுமாறினாலும், இந்த அணி நாட்டிற்காக பெரிய சாதனை படைக்கும் திறன் கொண்டது,” என்று தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.

மேலும், அக்டோபரில் காத்திருக்கும் இந்த மகத்தான அறைகூவலுக்காக தேசிய அணி முன்கூட்டியே தீவிரமான தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தேசிய அணியின் பயிற்சியாளர் பீட்டர் கிளாமோவ்ஸ்கி, நாட்டின் தலைசிறந்த வீரர்களை ஒருங்கிணைத்து வலுவான அணியை உருவாக்குவார் என்ற நம்பிக்கையையும் ஜோசுவே வெளிப்படுத்தினார்.

“மலேசிய ரசிகர்கள் இத்தகைய இறுதிப் போட்டிகளையும், கோப்பை வெல்லும் தருணங்களையும் காண நீண்ட காலமாக ஏங்கிக் காத்திருக்கிறார்கள். ஆகவே, இது வீரர்களுக்கே அல்ல, முழு நாட்டிற்குமான ஒரு பொற்கால வாய்ப்பு. நாங்கள் அங்கு சென்று, மலேசியாவுக்காக கோப்பையை வெல்ல போராடப் போகிறோம்,” என்று அவர் உணர்ச்சியோடு கூறினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset