செய்திகள் இந்தியா
பெங்களூருவில் சோகம்: மருத்துவமனைச் சுவர் சரிந்ததில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் பரிதாபமாகப் பலி
பெங்களூரு:
தென்னிந்திய நகரமான பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனை வளாகத்தின் 2.5 மீட்டர் உயரமுள்ள சுவர் இடிந்து விழுந்ததில், ஒரு குழந்தை உட்பட ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்தவர்களில் நால்வர் வீதியோர வியாபாரிகள் என்றும், இருவர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார். பலியான மற்றுமொருவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இந்த விபத்தில் காயமடைந்த மூவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் காயமடைந்த பெண் ஒருவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சுவர் இடிந்து விழுந்த விபத்து மிகவும் வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக பெங்களூருவில் நிலவி வந்த கடும் வெப்பத்தைத் தொடர்ந்து, ஏப்ரல் 29 அன்று திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. நகரின் பல பகுதிகளில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்தத் திடீர் மழை வெப்பத்திலிருந்து மக்களுக்குச் சற்றே நிம்மதியைத் தந்தாலும், திடீர் வெள்ளம், மரங்கள் முறிந்து விழுந்ததால் நகரின் பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்தக் கனமழையின் தாக்கத்தால் பலவீனமடைந்த மருத்துவமனைச் சுவரே இந்த உயிர்ச் சேதத்திற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுத் தரப்பில் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
June 21, 2026, 9:23 am
சார் தாம் யாத்திரையில் உயிரிழப்பு 198 ஆக உயர்ந்தது
June 16, 2026, 3:22 pm
இந்தியத் தலைநகரில் கடுமையான புழுதிப்புயல்: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது
June 16, 2026, 2:49 pm
ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 180 பயணிகள் பத்திரமாக மீட்பு
June 14, 2026, 12:22 pm
அயோத்தியில் ராமர் கோயில் காணிக்கை பணம் திருட்டு: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு
June 14, 2026, 9:27 am
இந்தியாவில் டைப்-2 வகை சர்க்கரை நோயால் பெண்கள் பாதிக்கப்படுவது 47% அதிகரிப்பு
June 13, 2026, 7:41 pm
