நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வங்கிப் பணத்திற்காகத் தம்பியின் எலும்புக்கூட்டைத் தோண்டி எடுத்த அண்ணன்: ஒடிசாவில் நிகழ்ந்த சோகம்

ஒடிசா :

இந்தியாவின் ஒடிசா மாநிலம், கேந்துஜார் மாவட்டத்தில் உள்ள டயனாலி கிராமத்தைச் சேர்ந்த ஜீது முண்டா என்பவர், வங்கியில் இருந்த தனது தம்பியின் சேமிப்புப் பணத்தைப் பெறுவதற்காக, புதைக்கப்பட்ட தம்பியின் எலும்புக்கூட்டைத் தோண்டி எடுத்து வங்கிக்குச் சுமந்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த இவரது தம்பி கக்ரா முண்டாவின் வங்கி கணக்கில் 19,300 ரூபாய் (சுமார் RM805 ரிங்கிட்) பணம் இருந்துள்ளது.

படிப்பறிவில்லாத ஜீது முண்டா, தம்பியின் மரணச் சான்றிதழ் உள்ளிட்ட முறையான ஆவணங்கள் இன்றி அந்தப் பணத்தைப் பெற வங்கிக்குச் சென்றுள்ளார். 

ஆனால், கணக்கு வைத்திருப்பவர் நேரில் வராமல் அல்லது வாரிசுச் சான்றிதழ் இன்றிப் பணத்தைத் தர முடியாது என வங்கி அதிகாரிகள் மறுத்துள்ளனர். 

சட்ட நடைமுறைகளைப் புரிந்து கொள்ள முடியாத ஜீது, தம்பி நேரில் வந்தால்தான் பணம் கிடைக்கும் எனத் தவறாக எண்ணி, சுடுகாட்டிற்குச் சென்று புதைக்கப்பட்ட தம்பியின் எலும்புகளைத் தோண்டி எடுத்து, துணியில் சுற்றி மூன்று கிலோமீட்டர் தூரம் சுமந்து வங்கிக்கு வந்துள்ளார்.

எலும்புக்கூட்டுடன் முதியவர் ஒருவர் வங்கிக்குள் நுழைந்ததைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் நிலைமையைச் சீர்செய்தனர். 

கிராமத் தலைவரின் உறுதிமொழி போன்ற எளிய நடைமுறைகளைப் பின்பற்றாமல், ஏழை மக்களிடம் கடினமான ஆவணங்களைக் கேட்டு அலைக்கழித்த வங்கி அதிகாரிகளின் செயலுக்குப் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மனிதநேயமற்ற முறையில் நடந்துகொண்ட வங்கி நிர்வாகத்திடம் இது குறித்து விளக்கம் கேட்டுள்ள காவல்துறையினர், மனிதாபிமான அடிப்படையில் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

கிராமப்புறங்களில் வாழும் படிக்காத எளிய மக்களுக்கு வங்கிச் சேவைகள் கிடைப்பதில் உள்ள சிக்கல்களை இச்சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset