நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மெக்ஸ் நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: எதிர்திசையில் வந்த காரால் வங்காளதேசப் பயணி பலி

கோலாலம்பூர்: 

மெக்ஸ் (MEX) நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் வங்காளதேச இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். குடிபோதையில் வாகனம் ஓட்டி இந்த விபத்தை ஏற்படுத்தியதாக 31 வயதுடைய ராணுவ அதிகாரி ஒருவரைப் போலிசார் கைது செய்துள்ளனர்.

சலாக் செலாத்தானிலிருந்து ஜாலான் துன் ரசாக் நோக்கிச் சென்ற அந்த ராணுவ அதிகாரியின் கார், எதிர்பாராதவிதமாக எதிர்திசையில் நுழைந்து அங்கிருந்த 'இ-ஹெயிலிங்' (e-hailing) வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. 

இந்த விபத்தின் போது, அந்த வாகனத்தில் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (KLIA) வந்து கொண்டிருந்த இரண்டு வங்காளதேசப் பயணிகள் இருந்தனர். பலத்த தலைக்காயம் அடைந்த 22 வயதுடைய வங்காளதேச இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் பயணம் செய்த 20 வயதுடைய வங்காளதேசப் பெண், வாகனத்தை ஓட்டிச் சென்ற உள்ளூர் ஓட்டுநர் ஆகிய இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. 

மேலும், ராணுவ அதிகாரியின் காரில் பயணித்த 36 வயதுடைய பெண்ணும் காயமடைந்தார். இவர்கள் அனைவரும் தற்போது கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குற்றஞ்சாட்டப்பட்ட ராணுவ அதிகாரியிடம் நடத்தப்பட்ட சுவாசப் பரிசோதனையில், அவர் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, மரணத்தை விளைவித்த மதுபோதை ஓட்டுநர் குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்த பொதுமக்கள் போலிசாருக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset