நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வாட்ஸ்அப் மூலம் போதைப்பொருள் விநியோகம்; சுற்றுலாத் தலத்தில் ரகசியமாக இயங்கிய கும்பல் கைது

கூச்சிங்: 

சந்தூபோங் சுற்றுலாத் தலத்தில் உள்ள தங்கும் விடுதிகளைப் போதைப்பொருள் பொதியிடும் மையங்களாகப் பயன்படுத்தி வந்த இரண்டு விநியோகக் கும்பல்களைச் சரவாக் மாநிலக் காவல்துறை முறியடித்துள்ளது. 

இம்மாதம் 7, 19-ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட இரு வேறு அதிரடிச் சோதனைகளில், மொத்தம் RM16.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முதல் சோதனையில், பொழுதுபோக்கு மையத்தில் பணியாற்றும் ஒரு ஜோடியைப் போலிசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 107 கிலோகிராமுக்கும் அதிகமான எம்.டி.எம்.ஏ (MDMA), கெட்டமின், எராமின் 5 உள்ளிட்ட பல வகை போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 

இவர்கள் தங்கும் விடுதிகளை வாடகைக்கு எடுத்து, சில நாட்களிலேயே இடத்தை மாற்றிக் கொண்டே தங்களின் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். 'வாட்ஸ்அப்' செயலி வழியாக வரும் ஆர்டர்களுக்கு ஏற்ப போதைப்பொருட்களைப் பொதியிட்டு விநியோகம் செய்வதற்காக இவர்களுக்கு மாதச் சம்பளமும் தரகுப் பணமும் வழங்கப்பட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இரண்டாவது சோதனையில், சுமார் 3.2 கிலோகிராம் கஞ்சா திரவம் அடங்கிய 1,281 பொட்டலங்களுடன் இரண்டு உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டனர். இக்கும்பல் கடந்த நவம்பர் மாதம் முதல் 'ரன்னர்' (Runner) எனும் விநியோகப் பணியாளர்களாகச் செயல்பட்டு வந்துள்ளனர். 

ஒருமுறை போதைப்பொருளைக் கடத்த இவர்களுக்கு RM8,000 ரிங்கிட் வரை ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தற்போது நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் மீது 1952-ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சுற்றுலாப் பயணிகள் தங்கும் இடங்களை இவ்வாறான குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தியதைக் காவல்துறை மிகத் தீவிரமாகக் கருதுவதோடு, இதன் பின்னணியில் உள்ள மற்ற நபர்களையும் தேடி வருவதாகச் சரவாக் மாநிலக் காவல்துறை ஆணையர் டத்தோ முஹம்மத் ஜைனல் அப்துல்லாஹ் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset