நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கேரளாவில் பயங்கரம்: பட்டாசு கிடங்கு தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

பெங்களூரு: 

தென்னிந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள பட்டாசு கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். 

கடந்த மூன்று நாட்களில் பட்டாசு ஆலைகளில் நிகழ்ந்த இரண்டாவது விபத்து இதுவாகும். திருச்சூர் மாவட்டப் போலிஸ் கண்காணிப்பாளர் நகுல் ராஜேந்திர தேஷ்முக் இது குறித்துக் கூறுகையில், மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், காயமடைந்த 15 பேரில் இருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

திருவிழாக் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உயிரிழந்தவர்களில் ஆறு பேரின் உடல் பாகங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதால், அவர்களின் அடையாளத்தைக் கண்டறிய டி.என்.ஏ (DNA) பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தத் தீ விபத்திற்கான துல்லியமான காரணம் குறித்துப் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தத் துயரச் சம்பவத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்டை மாநிலமான தமிழகத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது கேரளாவிலும் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இந்தியாவில் முறையான பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாததே இதுபோன்ற தொழிற்சாலை விபத்துகளுக்கு முதன்மைக் காரணமாகக் கருதப்படுகிறது.

கடந்த மாதமும் மேற்கு இந்தியாவில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக அரங்கேறும் இத்தகைய விபத்துகள், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு, விதிமுறைகளை அமல்படுத்துவதில் உள்ள பலவீனத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset