நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“திரெங்கானுவில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்”: மாநிலக் கல்வித் துறை அறிவித்துள்ளது

கோலா நேருஸ்:

திரங்கானு மாநிலத்தில் தற்போது நிலவும் வானிலையைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வி கற்கும் முறையை அமல்படுத்த வேண்டிய அவசியம் இப்போதைக்கு இல்லை என்று மாநிலக் கல்வித் துறை அறிவித்துள்ளது. 

கடுமையான வெப்ப அலையினால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களின் பட்டியலில் திரெங்கானு இடம்பெறவில்லை என்பதால், மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிகளுக்கு நேரில் வந்து பாடங்களைக் கற்கலாம் என்று அதன் இயக்குநர் கம்சா கமல் முஹம்மத் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளின் செயல்பாடுகள், சீருடை தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அந்தந்தப் பள்ளிகளுக்கும் மாநிலக் கல்வித் துறைக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

கோலா நேருஸில் உள்ள புக்கிட் தும்பு தேசியப் பள்ளியில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வானிலை ஆய்வு மையம், சுகாதார அமைச்சின் ஆலோசனைகளைத் தொடர்ந்து கவனித்து வருவதாகவும், நிலைமை மோசமடைந்தால் உடனடியாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

தற்போதைய நிலவரப்படி திரெங்கானுவில் அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பமே பதிவாகியுள்ளது. ஒருவேளை வெப்ப நிலை 35 டிகிரி செல்சியஸைத் தாண்டினால், வெளிப்புற நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். 

மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், வெப்பம் தாங்க முடியாத நிலையை எட்டினால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வீட்டிலிருந்தே கற்கும் முறை அமல்படுத்தப்படும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

பெற்றோர்கள், ஆசிரியர்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், தற்போதைய சூழலில் பள்ளிகளில் கல்வி போதிப்பது பாதுகாப்பானது என்றும் கல்வித் துறை இயக்குநர் மீண்டும் வலியுறுத்தினார். வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப அவ்வப்போது புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset