நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அரபிக் கடலில் பிரிட்டனது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்: மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்

லண்டன்:

பிரிட்டன் ராயல் கடற்படைக்குச் சொந்தமான 'எச்.எம்.எஸ் அன்சன்' (HMS Anson) எனும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் அரபிக் கடலுக்கு வந்து சேர்ந்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிநவீன 'டோமாஹாக்' ஏவுகணைகள், கனரக 'ஸ்பியர்ஃபிஷ்' நீர்மூழ்கி ஏவுகணைகளைக் கொண்டுள்ள இக் கப்பல், ஈரானின் நிலப்பரப்புகளைத் தாக்கும் வல்லமை கொண்டது. 

தற்போதைய சூழலில், இப் பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்தால் ஈரானுக்கு எதிராக உடனடித் தாக்குதல்களை முன்னெடுக்கும் நோக்கில் இக் கப்பல் வடக்கு அரபிக் கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் பிரதமரின் நேரடி அனுமதி கிடைத்தால், இக்கப்பல் கடல் மட்டத்திற்கு அருகே வந்து ஏவுகணைகளை ஏவும் வகையில் தயாராகும். ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை முறியடிக்கவும், ஈரானின் ஏவுகணைத் தளங்களைச் செயலிழக்கச் செய்யவும் அமெரிக்கா தனது ராணுவத் தளங்களைப் பயன்படுத்தப் பிரிட்டன் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும், இந்தப் போரை மேலும் விரிவுபடுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்பதைப் பிரிட்டன் தெளிவுபடுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழலைக் கருத்தில் கொண்டு, தனது தற்காப்பு, தாக்குதல் திறனைப் பறைசாற்றும் வகையில் பிரிட்டன் இந்த நீர்மூழ்கிக் கப்பலை அனுப்பியுள்ளது. 

ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதி செய்யவும், உலகளாவிய எரிபொருள் விநியோகப் பாதையில் ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கவும் இந்த ராணுவ நடவடிக்கை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பிரிட்டனின் இந்த நகர்வு சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset