நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா எண்ணெய் உற்பத்தி நாடாக இருந்தும் விலை உயர்வது ஏன்?: பிரதமர் அன்வார் வெளியிட்ட உண்மைத் தகவல்

கோலாலம்பூர்:

மலேசியா ஒரு எண்ணெய் உற்பத்தி நாடாக இருந்தும், உள்நாட்டில் எரிபொருள் விலை பாதிக்கப்படுவது ஏன் என்பது குறித்துப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று விளக்கம் அளித்துள்ளார். 

உலகளாவிய எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இதற்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ள அவர், குறிப்பாக மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்கள் உலக நாடுகளைப் பாதித்துள்ளதாகத் தெரிவித்தார்.

உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் நீரிணை, தற்போதைய மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், இதனால் எண்ணெய் விநியோகம் குறைந்து விலை அதிகரித்துள்ளதாகக் கூறினார். 

மலேசியாவின் எண்ணெய் விநியோகத்தில் சுமார் 50 சதவீதம் இப்பாதை வழியாகவே வருவதால், உலகச் சந்தையில் ஏற்படும் விலை ஏற்றம் மலேசியாவையும் நேரடியாகப் பாதிக்கிறது. மேலும், மலேசியா கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்தாலும், பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவு அதிகம் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

விலையேற்றத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க, அரசு வழங்கும் மானியத் தொகை ஒரே வாரத்தில் 700 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. 

'புடி மடானி' (BUDI Madani) போன்ற திட்டங்கள் மூலம் தகுதியுள்ளவர்களுக்குத் தொடர்ந்து மானியங்கள் வழங்கப்படுவதால், பொதுமக்கள், வணிகர்கள் சந்தையின் நேரடி விலையைச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகச் சூழல் நிலையற்றதாக இருந்தாலும், மக்களின் நலனைப் பாதுகாப்பதற்கே 'மடானி' அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் என்று தனது முகநூல் பதிவின் வாயிலாகப் பிரதமர் உறுதிபடத் தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset