நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஹரிமாவ் மலாயாவின் ஆசியக் கிண்ணக் கனவு சிதைந்தது

கோலாலம்பூர்: 

2027 ஆசியக் கிண்ண இறுதிச்சுற்றுக்கான மலேசியாவின் கனவு முற்றிலும் முறிந்தது. முன்பு நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டிகளில் தகுதி இல்லாத வீரர்களை களமிறக்கியதாக ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) இம் முடிவைத் தீர்மானித்துள்ளது.

மலேசிய கால்பந்து சங்கம் (FAM) வெளியிட்ட அறிக்கையில், இந்த முடிவு AFC-யின்  ஒழுக்க, நெறிமுறை குழுவின் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்டது என தெரிவித்தது.

ஜஹாங்கீர் பக்லாரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நேபாளம், வியட்நாம் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தகுதி இல்லாத வீரர்களைப் பயன்படுத்தியதன் மூலம் AFC ஒழுக்க, நெறிமுறை விதிமுறைகளின் 56ஆம் கட்டளையை FAM மீறியுள்ளது என கண்டறியப்பட்டது.

முன்னதாக நடந்த போட்டிகளில், 2025 மார்ச் 25ஆம் தேதி சுல்தான் இப்ராஹிம் மைதானத்தில் நேபாளத்தை 2-0 எனவும், 2025 ஜூன் 10ஆம் தேதி புக்கிட் ஜாலீல் தேசிய மைதானத்தில் வியட்நாமை 4-0 எனவும் மலேசியா வென்றிருந்தது.

“இதன் அடிப்படையில் AFC ஒழுக்க, நெறிமுறை குழு, அந்த இரு போட்டிகளிலும் மலேசியா 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்ததாக அறிவித்துள்ளது.

“மேலும், FAM மீது 50,000 அமெரிக்க டாலர் (RM196,119) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

“இந்தத் தீர்ப்பின் காரணங்களை எழுத்து மூலம் பெறுவதற்காக FAM விண்ணப்பிக்கவுள்ளது; அதன் பின் அடுத்த நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும்,” என்று FAM தெரிவித்துள்ளது.

முன்னதாக 15 புள்ளிகளுடன் குழு F-இல் முன்னிலையில் இருந்த ஹரிமாவ் மலாயா அணி, தற்போது 9 புள்ளிகளுக்கு குறைந்து, 2027 ஆசியக் கிண்ணத்திற்கான வாய்ப்பை இழந்துள்ளது.

இந்நிலையில், 18 புள்ளிகளுடன் வியட்நாம் அணி குழு சாம்பியனாகி, சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

இதற்கு முன், ஏழு வீரர்கள் தொடர்பான ஆவண முறைகேடு விவகாரம் AFC ஒழுக்க, நெறிமுறை குழுவிற்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், ஹரிமாவ் மலாயா அணிக்கு AFCயால் இடைநீக்கம் விதிக்கப்படவில்லை.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset