நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு: RM9.35 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

ஷா ஆலம்: 

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை முறியடித்து, நான்கு வெளிநாட்டு நபர்களைக் கைது செய்ததுடன் RM9.35 மில்லியன் மதிப்புள்ள 116 கிலோகிராம் கஞ்சா மலர்களையும் தனித்தனி சோதனைகளில் போலிசார் பறிமுதல் செய்தனர்.

மார்ச் 3 அன்று கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA)  நடைபெற்ற முதல் கைதில் வெளிநாட்டு நபரின் பயணப்பையில் 27.2 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா மலர்கள் நிரம்பிய 49 பிளாஸ்டிக் பைகளைக் கண்டுபிடித்ததாகச் சிலாங்கூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ ஷசெலி கஹார் தெரிவித்தார்.

“இந்தப் போதைப்பொருட்கள் சர்வதேச சந்தைக்காகக் கடத்தப்படவிருந்ததாக நம்பப்படுகிறது,” என்று அவர் இன்று சிலாங்கூர் போலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அந்தக் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, கும்பலின் முக்கிய நபராகச் சந்தேகிக்கப்படும் மற்றொரு வெளிநாட்டு நபர் செப்பாங் பகுதியில் உள்ள கோத்தா வாரிசான் வீட்டில் கைது செய்யப்பட்டார்.

அந்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனையில் சுமார் 14.3 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா மலர்கள் நிரம்பிய 25 பிளாஸ்டிக் பைகள் கண்டுபிடிக்கப்பட்டன என்றார் அவர்.

மேலும், மார்ச் 5 அன்று போலிசார் கோலாலம்பூரில் உள்ள மொன்ட் கியாரா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வெளிநாட்டு ஆணையும் ஒரு பெண்ணையும் கைது செய்தனர்.

“அந்தச் சோதனையில், ஐந்து பயணப்பைகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 74.8 கிலோகிராம் எடையுள்ள 136 பிளாஸ்டிக் பைகளில் கஞ்சா மலர்கள் கண்டுபிடிக்கப்பட்டன,” என்று அவர் கூறினார்.

20 முதல் 30 வயதுக்குள் உள்ள அனைத்து சந்தேக நபர்களும் திருமணம் ஆகாதவர்கள் என்றும், அவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியிலிருந்து இந்த ஆண்டு பிப்ரவரி வரை சமூக வருகை அனுமதி பத்திரம் மூலம் மலேசியாவுக்குள் நுழைந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

“ஆரம்பக்கட்ட சிறுநீர் பரிசோதனையில், சந்தேக நபர்களில் இருவருக்கு போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளதற்கான அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டன,” என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து, இரண்டு கார்கள், விலையுயர்ந்த கடிகாரங்கள், கிரிப்டோ நாணயங்கள் உள்ளிட்ட பல பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கு 1952 ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39Bன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset