நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மகனைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தாய் நீதிமன்றத்தில் ஆஜர்

ஜொகூர் பாரு: 

தனது 11 வயது மகனைத் தாக்கி காயப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 33 வயது காப்பீட்டு முகவர் இங் சா யீ, இன்று ஜொகூர் பாரு அமர்வு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். 

கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி, மாசாய் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் படிக்கட்டுப் பகுதியில் வைத்து தனது மகனைத் துன்புறுத்தி, உடல் ரீதியான காயங்களை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், நீதிபதி முஹம்மத் ஜமீர் சுஹைமி முன்னிலையில் வாசிக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டை அவர் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

இந்த வழக்கில் வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 20,000 ரிங்கிட் ஜாமின் தொகையை முன்மொழிந்தார். ஆனால், பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர் முஹம்மத் அஸ்லான் ஷா, தனது கட்சிக்காரர் ஒரு தனித்து வாழும் தாய் என்றும், மாதம் 3,900 ரிங்கிட் மட்டுமே வருமானம் ஈட்டுவதால் குறைந்தபட்ச ஜாமின் தொகையை வழங்க வேண்டும் என்றும் கோரினார். 

மேலும், கடந்த மார்ச் 6-ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற தனது மகன் வீடு திரும்பவில்லை எனப் புகார் அளிக்க அவர் காவல் நிலையம் சென்றபோதே, அவரது முன்னாள் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதையும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 9,000 ரிங்கிட் ஜாமின் தொகையுடன், பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார். 

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை, ஆவணங்கள் சமர்ப்பிக்கும் பணி வரும் ஏப்ரல் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2001-ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 50,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset