செய்திகள் மலேசியா
சட்டவிரோத நீர்வாழ் உயிரின வியாபாரம் முறியடிப்பு: RM3.35 லட்சம் மதிப்புள்ள உயிரினங்கள் பறிமுதல்
கோலாலம்பூர்:
ஜாலான் புடு சுற்றுவட்டாரத்தில் தடைசெய்யப்பட்ட நீர்வாழ் உயிரினங்களை விற்பனை செய்ததை ஒடுக்க மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில் RM335,000 மதிப்புள்ள பல்வேறு இனங்களைச் சேர்ந்த 675 தடைசெய்யப்பட்ட மீன்கள், 304 ஆமைகள், 'labi-labi' எனும் வகையைச் சேர்ந்த ஆமைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
மலேசிய மீன்வளத் துறை (DOF), உள்நாட்டு பாதுகாப்பு, பொது ஒழுங்குத் துறையின் கீழ் செயல்படும் வனவிலங்கு குற்றப்பிரிவு/சிறப்பு விசாரணை புலனாய்வு (WCB/PSK), வனவிலங்கு, தேசிய பூங்கா துறை (PERHILITAN), கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கை ஆறு வளாகங்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மீன் இனங்களில் 'Arapaima', 'Sturgeon', 'Midas', 'Peacock bass', 'Cambaridae' வகை லாப்ஸ்டர், 'Amazon Baung Ekor Merah', 'Pacu', 'Flowerhorn' ஆகியவை அடங்கும் என்று கோலாலம்பூர் கூட்டாட்சி பிரதேச மீன்வள இயக்குநர் சுஹானா காசிரோன் தெரிவித்தார்.
“இந்த இனங்கள் நீர் வளங்களில் உள்ள இயற்கை உயிரியல் பல்வகைப்பாட்டைப் பாதிக்கும் ஆக்கிரமிப்பு தன்மை கொண்டவை. அவை உள்ளூர் நீர்நிலைகளில் விடப்பட்டால், அங்குள்ள உள்ளூர் மீன் இனங்களின் வாழ்வை அச்சுறுத்தக்கூடும்.
“பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து மீன்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காகக் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA) அமைந்துள்ள சிலாங்கூர் மீன்வள உயிர் பாதுகாப்பு மையத்துக்குக் கொண்டு செல்லப்படும்,” என்று அவர் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகள் மீன்வளச் சட்டம் 1985 (சட்டம் 317), மீன்வள விதிகள் (மீன் இறக்குமதி தடை) 1990 (திருத்தம் 2024), கோலாலம்பூர், லாபுவான் கூட்டாட்சி பிரதேசத்தின் மீன்வளம் (உள்நாட்டு மீன்வளர்ப்பு) விதிகள் 2017 ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.
“இதனுடன் அபாய நிலையில் உள்ள உயிரினங்களின் சர்வதேச வர்த்தகச் சட்டம் 2008 (சட்டம் 686) கூட சம்பந்தப்பட்டுள்ளது.
“இந்த நடவடிக்கை சட்டவிரோத செயல்களை ஒடுக்குவதோடு மட்டுமல்லாமல், நீர்வாழ் உயிரினங்களைச் சேர்ந்த குற்றங்களை எதிர்கொள்வதில் DOF, PDRM இடையிலான மூலோபாய ஒத்துழைப்பையும் வலுப்படுத்துகிறது.
“விதிகளைப் பின்பற்றத் தவறும் வளாக உரிமையாளர்களுக்கு ஒவ்வொரு குற்றத்திற்கும் RM1,000 வரை அபராதம் அல்லது ஒரு ஆண்டுவரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படலாம்.
“வெளிநாட்டு மீன் இனங்களை வைத்திருப்பதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு முன் அருகிலுள்ள மீன்வள அலுவலகத்துடன் ஆலோசனை மேற்கொள்ள பொதுமக்களும் வளாக உரிமையாளர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர்,” என்றார் அவர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 5, 2026, 5:48 pm
RM4 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்: இரண்டு பேர் கைது
March 5, 2026, 5:47 pm
பயிற்சி தகராறு வன்முறையாக மாறியது: எட்டு பேருக்கு எதிராக இராணுவ வீரர் வழக்கு தொடுத்துள்ளார்
March 5, 2026, 5:46 pm
பாதுகாப்பு காவலர் உரிமை விவகாரம் கைகலகலப்பில் முடிந்தது: 8 பேர் கைது
March 5, 2026, 5:38 pm
உலக போர் விளைவு: மலேசியாவில் உணவு பாதுகாப்பு நிலைமை சீராக உள்ளது
March 5, 2026, 5:36 pm
“முஹைதீன் இனி பிரதமர் வேட்பாளர் அல்ல”: டத்தோ அஹமத் சம்சூரியின் விளக்கம்
March 5, 2026, 5:00 pm
தொழுகையில் இருந்த பெண்ணைத் தொந்தரவு செய்த மர்மநபர்: போலிஸ் தீவிர தேடல்
March 5, 2026, 2:44 pm
