நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரேக் பழுதால் தடம் புரண்ட ரயில்

தெனோம்: 

தெனோம்-பாங்கி பகுதியில் பிரேக் அமைப்பில் கோளாறு ஏற்பட்டதால் பாங்கி தேசியப் பள்ளி (SK Pangi) ஆசிரியர்கள் பயணம் செய்த ரயில் மோட்டார் ட்ராலியை மோதிய சம்பவம் ஏற்பட்டுள்ளது.

காலை 8 மணி அளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், தப்பிக்க முயன்ற 58 வயது ஆண் ஒருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

அந்த ரயில் தெனோமிலிருந்து கம்போங் பாங்கி நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்றதாகத் தெனோம் மாவட்ட காவல் துறை தலைவர், சூப்பிரிண்டெண்ட் அஸ்மிர் அப்துல் ரசாக் தெரிவித்தார்.

“தெனோம்-பாங்கி பாதையில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு காரணமாக ரயில் சேவை பாத்து 11 வரை மட்டுமே இயக்கப்பட்டது.

“ஆதலால் கம்போங் பாங்கிக்குச் செல்பவர்கள், மோட்டார் ட்ராலி அல்லது நடைபயணம் போன்ற மாற்று வழிகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது,” என்று அவர் தெரிவித்தார்.

சம்பவ நேரத்தில், சில கிராமவாசிகள் தங்களுடைய மோட்டார் ட்ராலிகளை ரயில்வே பாதையில் நிறுத்தி, ரயிலில் வரும் குடும்ப உறுப்பினர்களை எதிர்பார்த்து காத்திருந்ததாகவும் அவர் கூறினார்.

“பாத்து 11-ஐ அடைந்தபோது, பிரேக் அமைப்பு செயலிழந்ததால் ரயில் கட்டுப்பாட்டை இழந்து, பாதையில் இருந்த மோட்டார் ட்ராலிகளை மோதியது.

“இதனால் ரயில் தடம் புரண்டதுடன், மேலும் நான்கு மோட்டார் சைக்கிள்களையும் அது மோதியது என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், மெலலாப் மாநில சட்டமன்ற உறுப்பினர் (ADUN), டத்துக் ஜமாவி ஜாஃபார், இந்த சம்பவம் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார்.

“இந்தச் சம்பவம் மீண்டும் நடக்காத வகையில் சபா மாநில ரயில்வே துறை முழுமையான விசாரணை நடத்தி, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

மேலும், கடந்த ஆண்டு தொடக்கத்தில் மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ ஹஜிஜி நூர் அங்கீகரித்த தெனோம்-பாங்கி சாலைத் திட்டத்தை உடனடியாக தொடங்க பொதுப்பணித்துறை (JKR) நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset