நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

திருக்குறளை அரபி, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த முதல் தமிழர்: துபாய் நூலகத்துக்கு அவரது நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

துபாய் : 

துபாயில் உள்ள மிகப்பெரிய நூலகம் முஹம்மத் பின் ராஷித் நூலகம் ஆகும்.  இந்த நூலகத்தில் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, வைரமுத்து உள்ளிட்ட பல்வேறு தமிழறிஞர்களின் நூல்கள் இடம் பெற்றுள்ளன. 

இதன் தொடர்ச்சியாக தற்போது பேராசிரியர் ஏ. பஷீர் அஹமது ஜமாலி மொழிபெயர்த்த திருக்குறளின் அரபி, ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்கள் துபாய் முஹம்மது பின் ராஷித் நூலக அலுவலர் அமீரா ஃபஹத் இடம் அன்பளிப்பாக ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் வழங்கினார். 

இதனை பெற்றுக் கொண்ட நூலக அலுவலகர் அமீரா ஃபஹத், தொடர்ந்து தமிழ் நூல்களை நூலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கி வருவதற்காக நன்றி தெரிவித்தார். 

பேராசிரியர் ஏ. பஷீர் அஹமது ஜமாலி, இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகில் உள்ள வரவணி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். 

புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரபி மொழி பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

மேலும் லிபியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் அரபி மொழி பெயர்ப்பாளராகவும் பணிபுரிந்த அனுபவமிக்கவர் ஆவார். 

இவர் தமிழில் ஏழு நூல்களையும், ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு உள்ளிட்ட மூன்று நூல்களையும், அரபி மொழியில் மொழிபெயர்ப்பு உள்ளிட்ட ஐந்து நூல்களையும் எழுதியுள்ளார். 

திருக்குறளை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கும் பணிகளை மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு (சிஐசிடி) மத்திய கல்வி அமைச்சகம் வழங்கியது. 

இதனையடுத்து அந்த நிறுவனத்துக்காக திருக்குறளை தமிழ் மொழியில் இருந்து அரபி மொழிக்கு மொழிபெயர்த்தார்.

இந்த நூலானது உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி  வெளியிட்டார்.

இந்த நூல் குறளின் கவிதைச் சிறப்பு குறையாமல் அரபு மொழியில் மொழிபெயர்த்து, சர்வதேச அளவில் திருக்குறளைக் கொண்டு சேர்த்த முக்கிய மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். 

அரபி மற்றும் ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்த்த முதல் தமிழரான பேராசிரியர் பஷீர் அஹமதுக்கு வாழ்த்துக்கள் குவிகிறது. 
அவரது அரபி மொழிபெயர்ப்பு நூலை வளைகுடா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், நூலகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு சென்றடையும் பணியை ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் மேற்கொண்டுள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset